/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பழைய கமிஷனரும் திரும்பவில்லை; புதியவரும் வரவில்லை: ஓசூர் மாநகராட்சிக்கு ரூ.100 கோடி வரி வருவாய் பாதிப்பு
/
பழைய கமிஷனரும் திரும்பவில்லை; புதியவரும் வரவில்லை: ஓசூர் மாநகராட்சிக்கு ரூ.100 கோடி வரி வருவாய் பாதிப்பு
பழைய கமிஷனரும் திரும்பவில்லை; புதியவரும் வரவில்லை: ஓசூர் மாநகராட்சிக்கு ரூ.100 கோடி வரி வருவாய் பாதிப்பு
பழைய கமிஷனரும் திரும்பவில்லை; புதியவரும் வரவில்லை: ஓசூர் மாநகராட்சிக்கு ரூ.100 கோடி வரி வருவாய் பாதிப்பு
ADDED : பிப் 19, 2025 06:52 AM
ஓசூர்: ஈரோடு கிழக்கு தொகுதி சட்டசபை இடைத்தேர்தலுக்காக இடமாற்றம் செய்யப்பட்ட ஓசூர் மாநகராட்சி கமிஷனர் இன்னும் திரும்பி வரவில்லை. புதிய கமிஷனரும் நியமிக்கப்படவில்லை. அதனால், மாநகராட்சியில் புதிய சொத்து வரி விதிப்பு மற்றும் அனுமதி வழங்குவது போன்ற பணிகள் பாதிக்கப்பட்டு, 100 கோடி ரூபாய் வரிவருவாய் பாதிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி கமிஷனராக கடந்த ஆக., முதல் பணியாற்றி வந்தவர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்ரீகாந்த்; இவர் வந்த பின், 50 கோடி ரூபாய் அளவிற்கு மாநகராட்சி சொத்து வரி வருவாயை உயர்த்தினார். அதேபோல், சரியான விகிதாச்சார அடிப்படையில், வரி செலுத்தாமல், குடியிருப்பு பகுதிகளுக்கு விதிக்கப்படும் குறைந்த அளவிலான வரியை செலுத்தி வந்த, பல தனியார் நிறுவனங்களை கண்டறிந்து, சரியான அளவில் வரி விதித்து, நிலுவையுடன் வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுத்தார்.
அனுமேப்பள்ளி அக்ரஹாரத்தில் கடந்த, 14 ஆண்டுகளாக வரி செலுத்தாமல் இருந்த, 300 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை கண்டறிந்தார். மாநகராட்சியில் மொத்தம், 2,000 க்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு, புதிதாக வரி விதிக்க கமிஷனர் ஸ்ரீகாந்த் பட்டியலை தயாரித்தார். அதற்குள் அவர், ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் நடத்தும் அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதில், சேலம் மாநகராட்சி துணை கமிஷனர் பூங்கொடி அருமைக்கண் நியமிக்கப்பட்டார். அவர், ஊழியர்களுக்கு ஊதியம், மின்கட்டணம், அலுவலக பணிகள் போன்ற ஒரு சில பணிகளை மட்டுமே கவனிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதனால், புதிய வரி விதிப்பு, பழைய வரி வசூலிப்பு போன்ற பணிகள் முடங்கியுள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதியில், இடைத்தேர்தல் முடிந்து பல நாட்களாகி விட்டன. கமிஷனர் ஸ்ரீகாந்த் இன்னும் திரும்பவில்லை. அவருக்கு பதில் புதிய கமிஷனரும் நியமிக்கப்படவில்லை.
அதனால், மின் இணைப்பு, ஜி.எஸ்.டி., போன்ற பல பணிகளை மேற்கொள்ள முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். புதிய வரி விதிப்பால், மாநகராட்சிக்கு கிடைக்க வேண்டிய, 100 கோடி ரூபாய் சொத்து வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு, காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க, மாநகர கவுன்சிலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

