ADDED : டிச 04, 2025 07:17 AM
போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, பாரூர் பஞ்.,க்கு உட்பட்ட, வெற்றிலைகாரனுார் கிராமத்திலிருந்து ஆமணக்கம்பட்டி செல்லும் சாலை குண்டும், குழியுமாக இருந்தது. அப் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, நேற்று இச்சாலையை, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 15வது நிதிக்குழு மானியத்தில், 400 மீட்டர் துாரத்திற்கு தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்தது.
அப்போது, அப்பகுதியில் உள்ள மக்கள், சாலை அமைக்கும் வெற்றிலைகாரனுாரிலிருந்து ஆமணக்கம்பட்டி செல்லும் பாதையில், குறுகிய அகலம் கொண்ட மூன்று கல்வெட்டுகள் உள்ளன. அந்த கல்வெட்டுகளை அகலப்படுத்தி விட்டு, பிறகு தார்ச்சாலை அமைக்க வேண்டும் என, தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், பணி ஒப்பந்ததாரர், மக்கள் கூறிய கல்வெட்டுகளை அகலப்படுத்தி தருவதாக கூறியதையடுத்து, அப்பகுதி மக்கள் சமாதானமடைந்து கலைந்து சென்றனர்.

