/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் விஷம் வைத்து கொல்லப்பட்ட தெருநாய்கள்
/
ஓசூரில் விஷம் வைத்து கொல்லப்பட்ட தெருநாய்கள்
ADDED : மே 08, 2024 05:11 AM
ஓசூர் : ஓசூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள விஜய் நகரில், 68க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
இப்பகுதியில், 6க்கும் மேற்பட்ட தெருநாய்கள் உள்ளன. இதில் ஒரு தெருநாய் கடந்த, 20 நாட்களுக்கு முன், 5 குட்டிகளை ஈன்றது. அந்த நாய் நேற்று உயிருக்கு போராடியது. இதை பார்த்த அப்பகுதி மக்கள், ஓசூர் பழைய பெங்களூரு சாலையிலுள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையளித்தனர்.நாய்க்கு விஷம் வைத்திருக்கலாம் என, டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் தங்களது பகுதிக்கு நாயை மீண்டும் அப்பகுதி மக்கள் அழைத்து சென்றனர். குட்டிகளுக்கு பால் கொடுத்த நாய், சிறிது நேரத்தில் உயிரிழந்தது. அதேபோல், அப்பகுதியில் மற்றொரு நாய் விஷம் வைத்து கொல்லப்பட்டு கிடந்தது. மர்ம நபர்கள் நாய்களை விஷம் வைத்து கொன்றது, அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்தது.

