ADDED : அக் 16, 2024 07:28 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியை அடுத்த மஞ்சுகொண்டப்பள்ளி அருகே, கெஸ்துாரை சேர்ந்த கூலி தொழிலாளி கோவிந்தன், 42; இவரின் மகன் கிரண், 15; அஞ்செட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார். தேவன்தொட்டியில் அரசு பழங்குடியினர் நல மாணவர் விடுதியில் தங்கியிருந்தார்.
காலாண்டு விடுமுறைக்கு ஊருக்கு வந்தவர், கடந்த வாரம், 6ல் பள்ளி திறந்த நிலையில், நேற்று முன்தினம் தான் விடுதிக்கு திரும்பினார். பள்ளிக்கு செல்லாமல் விடுதியிலேயே இருந்துள்ளார். பிளஸ் 1 மாணவர் ஒருவரது மொபைல்போனை, எடுத்து விட்டதாக தகவல் பரவியதால், கிரண் மனமுடைந்து காணப்பட்டார்.
நேற்று முன்தினம் இரவு சாப்பிட வராததால், விடுதி வார்டன் மற்றும் சக மாணவர்கள் முதலாவது தளத்திலுள்ள கிரண் அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு மின் விசிறியில் துாக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினார். அஞ்செட்டி போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.