ADDED : செப் 22, 2024 03:37 AM
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே போடிச்சிப்பள்ளியை சேர்ந்தவர் குமார், 40, மேஸ்திரி; அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி கணேஷ், 50; இருவரும் நேற்று முன் தினம் இரவு 10:15 மணிக்கு, கெலமங்கலத்தில் இருந்து ஊருக்கு ஸ்பிளண்டர் பைக்கில் சென்றனர்.
கெலமங்கலம் கூட்ரோட்டில் சென்றபோது, ஓசூரில் இருந்து வன்னியபுரம் அருகே உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துக்கு தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பஸ் பைக் மீது மோதியது. இதில் கணேஷ் துாக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தார்; குமார் பைக்குடன் பஸ்சில் சிக்கி சில அடி துாரத்திற்கு இழுத்து செல்லப்பட்டார்.
குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த கணேஷ் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.
தகவலறிந்த போடிச்சிப்பள்ளி பகுதி மக்கள், இருவரின் உறவினர்கள் ஒன்றிணைந்து, எட்டுக்கும் மேற்பட்ட டாடா எலக்ட்ரானிக்ஸ் பஸ்களின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர்.
இதனால் தொழிலாளர்கள் அலறியடித்து பஸ்சை விட்டு வெளியே ஓடினர். கெலமங்கலம் - ராயக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதித்தது. கெலமங்கலம் போலீசார் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தினர்.