/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 4000 கன அடியாக உயர்வு
/
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 4000 கன அடியாக உயர்வு
ADDED : ஏப் 20, 2025 07:08 AM
ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு, 4000 கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழக - கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் மழையின்றி கடும் வறட்சியால், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து, சமீப காலமாக கடுமையாக சரிந்து கொண்டே வந்தது. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீரின்றி ஆங்காங்கே பாறைகளாக காட்சி அளித்தது.
இந்நிலையில் கடந்த, 2 நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து குடிநீருக்காக திறக்கப்பட்ட நீரால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 2000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 4:30 மணிக்கு, 4000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் மெயின் அருவி, சினி பால்ஸ், மெயின் பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
கோடைக்காலம் துவங்கிய நிலையில், நீர்வரத்து அதிகரித்து உள்ளதால், ஒகேனக்கல்லில் உள்ள வியாபாரிகள், பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள் என பல தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.