/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தனிநீதிபதியின் உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு
/
தனிநீதிபதியின் உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு
ADDED : செப் 14, 2024 05:11 AM
மதுரை: பேரையூர் அருகே உத்தப்புரம் கோயிலில் வழிபாடு நடத்த அனுமதித்த தனிநீதிபதியின் உத்தரவிற்கு எதிராக அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.
உத்தப்புரம் பாண்டி ஏற்கனவே தாக்கல் செய்த மனு: உத்தப்புரத்தில் முத்தாலம்மன், மாரியம்மன் கோயில் உள்ளது. இது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு சொந்தமானது. 2008ல் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தன. வேறொரு சமூகத்தை சேர்ந்தவர்கள் கோயிலை ஆக்கிரமிக்க முயற்சித்தனர். வழிபாட்டு உரிமை கோரினர். இரு சமுதாயத்தினரிடையே 2012 ல் அப்போதைய எஸ்.பி., தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. வேறொரு சமூகத்தினரை வழிபட அனுமதிப்பதில் ஆட்சேபனை இல்லை; கோயில் பராமரிப்பு, நிர்வாகம் எப்போதும்போல் ஒரு சமுதாயத்திடம் இருக்கும். இருதரப்பிலும் கிரிமினல் வழக்குகளை வாபஸ் பெறுவது என உடன்பாடு ஏற்பட்டது. திருவிழா 2012 முதல் 2014 வரை நடந்தது.
சமாதான உடன்பாட்டை 2015 ல் திருவிழாவின்போது சிலர் மீற முயன்றனர். இதனால் அரசு தரப்பில் திருவிழா நிறுத்தப்பட்டது. கோயில் வளாகம் பூட்டப்பட்டது. பின் 9 ஆண்டுகளாக கோயிலை திறக்க அரசு தரப்பில் எங்களை அனுமதிக்கவில்லை. கோயிலை திறந்து பூஜை, திருவிழாக்கள் நடத்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
ஜூலை 30 ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்: கோயில் கிராம மக்களுக்கு சொந்தமானது. மனுதாரர் மற்றும் கிராம மக்கள் வழிபட உரிமை உண்டு. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் போலீசார் வழக்கு பதியலாம். கோயிலை பூட்டி வைத்திருக்கக்கூடாது. ஏற்கனவே இருதரப்பிலும் ஏற்பட்ட சமாதான உடன்படிக்கையை தற்போது பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து கலெக்டர், ஆர்.டி.ஓ., தாசில்தார் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது.அரசு தரப்பு: மற்றொரு தரப்பினரை எதிர்மனுதாரராக வழக்கில் பாண்டி சேர்க்கவில்லை. மற்றொரு தரப்பினரின் கருத்தை கோராமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தது ஏற்புடையதல்ல. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள் செப்.18 க்கு ஒத்திவைத்தனர்.