/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பக்தி மணம் பரவ வேண்டிய பொய்கையில் குப்பை மணமா
/
பக்தி மணம் பரவ வேண்டிய பொய்கையில் குப்பை மணமா
ADDED : மே 04, 2024 05:29 AM

மதுரை: திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் பெருகி வரும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொலிவிழந்து காணப்படுகிறது.
அறுபடை வீடுகளில் முதல்படையான திருப்பரங்குன்றத்தில் கிரிவலப் பாதை அருகே 'சரவணப் பொய்கை' உள்ளது. இங்கு பொது மக்கள் தினமும் ஆடைகளை சோப்பு பயன்படுத்தி துவைப்பதாலும், உணவருந்திய பின் பிளாஸ்டிக் கழிவுகளை குளத்தில் வீசிச் செல்வதாலும் அசுத்தமடைந்து வருகிறது. சில பக்தர்கள் குளித்த பின் பழைய ஆடைகளை குளம் அருகில் நடைபாதையிலேயே விட்டுச் செல்கின்றனர். அவை சகிக்க முடியாத அளவு துர்நாற்றம் வீசுகிறது.
பா.ஜ., அரசு தொடர்பு பிரிவு மண்டல் தலைவர் முருகன் கூறியதாவது: புனிதமான சரவணப் பொய்கையில், கழிவுநீர் கலப்பது, துணிகளை துவைப்பது என மாசுபடுத்துகின்றனர். இதனை கோயில் நிர்வாகமும் சுத்தமாக பராமரிப்பதில்லை. குற்றாலம் அருவியில் குளிப்பவர்கள்கூட சோப்பு, ஷாம்பு, எண்ணெய் பயன்படுத்த தடை உள்ளது. ஆனால் இங்கு எவ்வித தடையுமின்றி பயன்படுத்துகின்றனர். இதனால் குளத்தில் உள்ள உயிரினங்கள் பாதிக்கின்றன. அதிகாரிகளின் அலட்சியப்போக்கே சரவணப் பொய்கை மாசடைய காரணம், என்றார்.
கோயில் இணை கமிஷனர் சுரேஷ் கூறியதாவது: குளத்தை அடிக்கடி சுத்தம் செய்கிறோம். குப்பை தொட்டிகள் போதுமான அளவில் வைக்கப்பட்டுள்ளன.
சரவணப் பொய்கையில் குளிக்கக் கூடாது என வலியுறுத்துகிறோம். ஆனால் உள்ளூர் மக்கள் அதை பொருட்படுத்தாமல் நீதிமன்றம் வரை செல்கின்றனர். மக்கள் பிரதிநிதிகளும் உள்ளூர் மக்களுக்கு ஆதரவாக உள்ளனர். இதனால் கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மாணிக்கம் தாகூர் எம்.பி., நிதி மூலம் சரவணப் பொய்கை அருகே முடி காணிக்கை செலுத்தும் பகுதியில் குளியலறை, கழிப்பறை, சலவைக் கூடம் கட்டப்பட்டுள்ளது. தண்ணீர் 24 மணி நேரமும் சப்ளை செய்யப்படுகிறது.
இவ்வசதி செய்தும் மக்கள் அங்கு செல்வதில்லை. மீறி தடுத்தால் கதவு, மின்விளக்குகளை சேதப்படுத்துகின்றனர். இரு தரப்பிலும் போலீசில் புகார் கொடுக்கப்பட்டு வருகிறது. சரவணப் பொய்கையில் குளிக்க, சோப்பு, ஷாம்பு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.