ADDED : ஏப் 26, 2024 12:34 AM
அழகர்கோவில் : மதுரை ராமராயர் மண்டபத்தில் நேற்று (ஏப்.,25) தசாவதார அலங்காரத்தில் பக்தர்களுக்கு அழகர் அருள்பாலித்தார்.
அழகர்மலையிலிருந்து வைகையில் ஏப்.,23ல் எழுந்தருளிய அழகர் நேற்று முன்தினம் (ஏப்.,24) வண்டியூர் தேனுார் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தார். அதிகாலை 1:30 மணிக்கு முத்தங்கி சேவை, 2:40க்கு மச்சஅவதாரம், 3:10க்கு கூர்ம அவதாரம், 4:00 மணிக்கு வாமன அவதாரம், 5:30க்கு ராம அவதாரம், காலை 6:45க்கு கிருஷ்ண அவதாரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
காலை 8:40க்கு மோகினி அவதாரத்தில் அழகர் புறப்பட்டு தமுக்கம் எதிரேயுள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு சென்றார். நேற்று அதிகாலை 2:30 மணிக்கு பூப்பல்லக்கில் கருப்பண சுவாமி கோயிலிலிருந்து கள்ளழகர் வேடத்தில் அழகர் மலை நோக்கி புறப்பட்டார். நாளை இருப்பிடம் சேருகிறார்.

