/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றிலும் விதிமீறல் கட்டடங்கள்
/
மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றிலும் விதிமீறல் கட்டடங்கள்
மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றிலும் விதிமீறல் கட்டடங்கள்
மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றிலும் விதிமீறல் கட்டடங்கள்
ADDED : ஆக 07, 2024 07:55 AM

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றிலும் உள்ள விதிமீறல் கட்டடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை குமார் 2011 ல் தாக்கல் செய்த பொதுநல மனு:
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுற்றுச் சுவரில் இருந்து ஒரு கி.மீ., சுற்றளவில் 9 மீ., உயரத்திற்கு மேல், விதிகளை மீறி பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவை கோயில் கோபுரங்களை மறைக்கும் வகையில் உள்ளன.
விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
ஏற்கனவே பிப்ரவரியில் விசாரணையின்போது மதுரை மாநகராட்சி கமிஷனர் தரப்பு: மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றிலும் ஒரு கி.மீ., சுற்றளவில் 9 மீ.,உயரத்திற்கு மேல் கட்டுமானம் கட்டக்கூடாது என 1997 ஜன.30 ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இக்கோயில் கோபுரங்களை சுற்றி அவற்றை மறைக்கும் வகையில் 9 மீ., உயரத்திற்கு மேல் 547 கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக ஏற்கனவே ஆய்வு செய்த வழக்கறிஞர் கமிஷனர் குழு இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தது. ஜன.31 ல் விசாரணையின்போது இதுபோல் 1000 கட்டடங்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 9 மீ., உயரத்திற்கு மேல் உள்ளவை, அனுமதியற்ற கட்டுமானங்கள், விதிமீறல் கட்டடங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் தவறு செய்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
சில கட்டடங்களை பூட்டி 'சீல்' வைத்துள்ளோம். இவ்வாறு குறிப்பிட்டார்.
நேற்று நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது.
மாநகராட்சி தரப்பு: 1869 கட்டடங்கள் விதி மீறி கட்டப்பட்டுள்ளன. நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்: 1869 கட்டடங்களின் உரிமையாளர்கள் அனுமதிக்கப்பட்ட கட்டட திட்ட வரைபடத்தை மாநகராட்சி கமிஷனர், உள்ளூர் திட்டக் குழுமத்திடம் (எல்.பி.ஏ.,) சமர்ப்பிக்க வேண்டும். விதிமீறல் இருக்கும்பட்சத்தில் சட்டப்படி 4 வாரங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநகராட்சி மண்டலம் 3, 4ல் சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் பொறியாளர்களாக பணிபுரிந்தவர்களின் விபரங்களை கமிஷனர் தாக்கல் செய்ய வேண்டும். விதிமீறல் கட்டடங்களை தடுக்கத் தவறிய சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும்.
விசாரணை செப்.4 க்கு ஒத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.