/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆற்றில் மூழ்கி மாணவன் மரணம் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடு
/
ஆற்றில் மூழ்கி மாணவன் மரணம் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடு
ஆற்றில் மூழ்கி மாணவன் மரணம் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடு
ஆற்றில் மூழ்கி மாணவன் மரணம் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடு
ADDED : ஜூலை 16, 2024 05:01 AM

மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே குண்டாற்றில் மூழ்கி பள்ளி மாணவன் இறந்ததற்கு ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருமங்கலம் அருகே பெரிய உலகாணி முருகன் தாக்கல் செய்த மனு:
என் மகன் பெரிய உலகாணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்தார். 2017 நவ.,15ல் பள்ளி சென்றவர் வீடு திரும்பவில்லை. பள்ளி நேரத்தில் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டார். குண்டாற்றில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் மூழ்கி இறந்தார். கூடக்கோவில் போலீசார் வழக்கு பதிந்தனர்.
சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறு அமைத்தது மற்றும் ஆற்றின் இயற்கையான வழித்தடத்திற்கு இடையூறு ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகன் மரணத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க பொதுப்பணித்துறை செயலர், பள்ளிக் கல்வித்துறை செயலர், கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி சி.சரவணன் விசாரித்தார்.
அரசு தரப்பு: மனுதாரரின் மகன் பள்ளி நேரத்தில் பள்ளியை விட்டு வெளியே செல்லவில்லை. பள்ளி நேரம் முடிந்ததும் பிற நண்பர்களுடன் ஆற்றுக்குச் சென்றார். நீரில் மூழ்கி இறந்தார். இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதி: பள்ளி நிர்வாகம் கவனக்குறைவாக இருந்ததாக கூற முடியாது. இழப்பீடு வழங்குவதற்கு கல்வித்துறையை பொறுப்பாக்க முடியாது. ஆற்றில் நீரோட்டம் இருக்கும்போது மூழ்கும் அபாயம் குறித்து மக்கள் குறிப்பாக சிறார்கள் ஆற்றுப் படுகைகளை பார்வையிடாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டியது பொதுப்பணித்துறையின் பொறுப்பு.
மனுதாரருக்கு இழப்பீடு ரூ.5 லட்சத்து 50 ஆயிரத்தை 6 சதவீத வட்டியுடன் கலெக்டர், பொதுப்பணித்துறை மதுரை குண்டாறு பாசன கோட்ட செயற்பொறியாளர், விருதுநகர் வைப்பாறு பாசன கோட்ட கண்காணிப்பு பொறியாளர் வழங்க வேண்டும். இது முதல்வர் நிவாரண நிதியிலிருந்து வழங்கும் தொகையை கட்டுப்படுத்தாது.
இவ்வாறு உத்தரவிட்டார்.

