/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
6 ஆயிரம் ஓட்டுகள் கொண்ட 5 கிராமங்களில் 500 ஓட்டுகள் கூட பதிவாகவில்லை பின்னணி என்ன
/
6 ஆயிரம் ஓட்டுகள் கொண்ட 5 கிராமங்களில் 500 ஓட்டுகள் கூட பதிவாகவில்லை பின்னணி என்ன
6 ஆயிரம் ஓட்டுகள் கொண்ட 5 கிராமங்களில் 500 ஓட்டுகள் கூட பதிவாகவில்லை பின்னணி என்ன
6 ஆயிரம் ஓட்டுகள் கொண்ட 5 கிராமங்களில் 500 ஓட்டுகள் கூட பதிவாகவில்லை பின்னணி என்ன
ADDED : ஏப் 20, 2024 05:46 AM

திருமங்கலம்: விருதுநகர் தொகுதிக்குஉட்பட்ட கள்ளிக்குடி ஒன்றியத்தில் கோழி கழிவுகளை உரமாக மாற்றும் ஆலையை மூடக்கோரி 5 கிராம மக்கள் தேர்தல்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து சில நுாறு ஓட்டுகள் பதிவாகின.
கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம் கே. சென்னம்பட்டி அருகில் கோழி கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் ஆலை ஓராண்டாக இயங்குகிறது. இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தொழிற்சாலையால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார கேடும் ஏற்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர். 3 நாட்களுக்கு முன் கோழி கழிவுகளை ஏற்றி வந்த வாகனத்தை வழிமறித்து கள்ளிக்குடி - காரியாபட்டி ரோட்டில் 3 கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று தேர்தல் நடந்த நிலையில் மேலப்பட்டி, கே.சென்னம்பட்டி, ஓடைப்பட்டி, ஆவல்சுரன்பட்டி, பேய்குளம், உன்னிபட்டி கிராம மக்கள் ஓட்டளிக்க செல்லவில்லை. மாவட்ட எஸ்.பி. அரவிந்த், ஆர்.டி.ஓ., சாந்தி, டி.எஸ்.பி., அருள், தாசில்தார் செந்தாமரை என அதிகாரிகள் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
'விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என ஆர்.டி.ஓ., உறுதிமொழி கடிதம் எழுதி கொடுத்தார். ஆனால் மக்கள்அதை ஏற்கவில்லை. பின்னர் பேச்சுவார்த்தைக்கு பின் மேலப்பட்டியில் 539 ஓட்டுகளுக்கு 115 ஓட்டுகள், ஓடைப்பட்டியில் 634க்கு 10 ஓட்டுகள் என சில கிராமங்களில் ஓட்டுப்பதிவு நடந்தது. பேய்குளம், கே.சென்னம்பட்டியில் ஒரு ஓட்டு கூட பதிவாகவில்லை.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தி கூறுகையில் ''தேர்தல் பார்வையாளர்கள் அரசுக்கு அறிக்கை அளிப்பார்கள். அதன் அடிப்படையில் தேர்தல் மீண்டும் நடத்துவதா, வேண்டாமா என தேர்தல்கமிஷன் முடிவு செய்யும்''என்றார். மொத்தம் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டுகள் உள்ள அந்த கிராமங்களில் 500 ஓட்டுகள் கூட பதிவாகவில்லை.

