/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்து திருக்குளத்தில் மண் சரிவு
/
குன்றத்து திருக்குளத்தில் மண் சரிவு
ADDED : செப் 15, 2024 12:57 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் திருக்குளத்தில் (லட்சுமி தீர்த்த குளம்) சீரமைப்பு பணி நடக்கிறது. நேற்று முன்தினம் குளத்தின் வடக்கு பகுதியில் மணல் சரிந்தது.
திருக்குளத்தின் உட்புற கருங்கல் சுவர் 2018 முதல் ஒவ்வொரு பகுதியாக இடிந்தது. இதனால் ரூ. 6.50 கோடியில் பழமை மாறாமல் சீரமைப்பு பணி நடக்கிறது.
குளத்தின் வடக்கு பகுதி மூலையில் இருந்த மணல் நேற்றுமுன்தினம் சரிந்தது. அப்பகுதியில் பணிகள் நடக்காததால் யாருக்கும் பாதிப்பு இல்லை.
நேற்று அறங்காவலர் குழுத்தலைவர் சத்யபிரியா, அறநிலையத் துறை மண்டல உதவி கோட்ட பொறியாளர் சரவணகுமார், திருப்பரங்குன்றம் மின் உதவி பொறியாளர் சுமங்களா தேவி, கோயில் கண்காணிப்பாளர் ரஞ்சனி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
சத்யபிரியா கூறியதாவது: மண் சரிந்த பகுதி முழுவதும் ஈரப்பதமாக உள்ளது. குடியிருப்பவர்கள் பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அப்பகுதி கரையிலுள்ள பாடசாலை கட்டடம், மண்டபத்தில் உள்ளவர்களை திருக்குளத்தின் பணிகள் முடியும் வரை ஆறு மாதங்களுக்கு வேறு இடங்களுக்கு மாற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
சேதம் அடைந்த பகுதிகளில் பாதுகாப்பு கருதி மணல் மூடைகள் அடுக்கப்பட்டுள்ளன. அப்பகுதியை தவிர்த்து மற்ற இடங்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மணல் சரிந்த பகுதியில் இரும்பு, கான்கிரீட் சீட் அமைத்து பணிகளை தொடர்வது குறித்து நிபுணர்களிடம் ஆலோசிக்கப்பட்டுள்ளது என்றார்.