ADDED : செப் 15, 2024 12:59 AM
மதுரை : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மற்றும் மாவட்ட நீதிமன்ற லோக் அதாலத்தில் 5562 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு ரூ.45 கோடியே 70 லட்சத்து 74 ஆயிரத்து 610 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் லோக் அதாலத் நடந்தது. ஓய்வு பெற்ற நீதிபதிகள் சொக்கலிங்கம், ஆனந்தி, பாண்டுரங்கன், மதுரசேகரன், வழக்கறிஞர்கள் காஜா மைதீன், முகமது மைதீன், டாக்டர் கோபி மனோகர் விசாரித்தனர். 356 வழக்குகள் பட்டியலிடப்பட்டன. மனுதாரர்கள், எதிர்மனுதாரர்கள் இடையே 30 வழக்குகளில் சமரசம் ஏற்பட்டது. ரூ.4 கோடியே 2 லட்சத்து 47 ஆயிரத்து 334 இழப்பீடு வழங்க உத்தர விடப்பட்டது. ஏற்பாடுகளை பதிவாளர் (நீதித்துறை) வெங்கடவரதன் செய்திருந்தார்.
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் லோக்அதாலத் முதன்மை நீதிபதி சிவகடாட்சம் தலைமை வகித்தார். மதுரை, உசிலம்பட்டி, மேலுார், திருமங்கலம், வாடிப்பட்டி நீதிமன்றங்களில் 22 அமர்வுகள் ஏற்படுத்தப் பட்டது.
நீதிபதிகள் செங்கமலச்செல்வன், அல்லி, ஜோசப் ஜாய், முருகன், காமராஜ், பாரதிராஜா பங்கேற்றனர்.5628 வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டன. 5532 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
ரூ. 41 கோடியே 68 லட்சத்து 27 ஆயிரத்து 276 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
இதில் 293 மோட்டார் வாகன விபத்து வழக்கு, 39 சிவில், 144 காசோலை மோசடி வழக்குகள் அடங்கும்.
முக்கியமாக 26 விவாகரத்து வழக்குகளில் தம்பதியினர்களிடையே சமரசம் ஏற்பட்டது. வழக்கை வாபஸ் பெற்றனர். சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் ராஜ மகேஷ் ஏற்பாடுகளை செய்திருந்தார்.