ADDED : பிப் 27, 2025 01:42 AM

மதுரை; மதுரையில் கோடை துவங்கும் நேரத்தில் 2 நாட்களாக மழை பெய்யும் சூழல் உருவாகியுள்ளதால் வெயில் கொடுமை தணிந்துள்ளது.
பிப்ரவரி முடியும்போது மார்ச் துவங்கி மே வரை கோடை காலம் தொடரும். இந்த 3 மாதங்களும் வெயில் மக்களை வறுத்தெடுத்து விடும்.
இந்தாண்டு பிப்ரவரி இறுதியில் 2 நாட்களாக மாலையில் மேகமூட்டம் உருவாகி மதுரையை நிழல் போர்வையால் போர்த்தியுள்ளது. இதனால் வெம்மை தணிந்துள்ளது.
கடந்த 2 மாதங்களாக வறட்சியான வானிலை இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக வெயில் துவங்கி, வெப்பம் அதிகரித்து வந்தது.
இதுகுறித்து பேரிடர் மேலாண்மை பிரிவு தாசில்தார் சிவபாலன் கூறுகையில், ''சில தென்மாவட்டங்களில் மார்ச் 6 வரை லேசான மழைப் பொழிவுக்கு வாய்ப்பிருப்பதாக தகவல் உள்ளது. அருகில் உள்ள மதுரையிலும் அதன் அறிகுறியாக லேசான மழை பெய்துள்ளது.
பொதுவாக மேகமூட்டமாக உள்ளது'' என்றார்.
நேற்று முன்தினம் மதுரை வடக்கில் 9.4 மி.மீ., தல்லாகுளம் 11, விரகனுார் 3, சிட்டம்பட்டி 12.6, கள்ளந்திரி 7, மேலுார் 10.3, விமான நிலையம் 1.7, திருமங்கலம் 3.4, பேரையூர் 7.6, எழுமலை 0.4, கள்ளிக்குடி 3.6 மி.மீ., அளவுக்கு மழை பெய்துள்ளது. கடந்தாண்டு ஜனவரியில் 22.4 மி.மீ., பிப்ரவரியில் 13 மி.மீ., அளவிலும் மழை பெய்துள்ளது.
இந்தாண்டு அதே ஜனவரி, பிப்ரவரியில் நேற்றுதான் மழை பெய்துள்ளது.