
மதுரை: மதுரை மாவட்டத்தில் 2 நாட்களாக கோடை வெயிலுக்கு இதமாக கார்மேகம் மழை பொழியாமல் குடைபிடித்து குளிர்நிழல் தந்தது.
மதுரையில் சில நாட்களாக கோடையில் மழை பெய்து வருகிறது. தினமும் காலை வெயிலுடன் துவங்கினாலும் சில மணி நேரத்திற்குள் மேகமூட்டமாகி, குளிர்ந்து மாலை நேரத்தில் மழை பொழிந்து வருகிறது. இதனால் சில மாதங்களாக வெப்பத்தில் புழுங்கித் தவித்த மக்கள் மகிழ்ந்தனர்.
2 நாட்களாக வெறும் மழை மேகங்கள் கூடி சிறு துளிகளை துாவிவிட்டு கலைந்து விடுகின்றன. இவ்வகையில் சில நாட்களாக தினமும் 697 மி.மீ., 319 மீ., 477 மி.மீ., 214 மி.மீ., 74.70 மி.மீ., என பெய்த மழை, நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் 9.30 மி.மீ., அளவுக்கே பதிவானது.
கள்ளந்திரியில் 5, புலிப்பட்டியில் 1.20, உசிலம்பட்டியில் 2, விமான நிலையம் 0.39, எழுமலையில் 0.80 என்ற அளவிலேயே மழை இருந்தது. நேற்றும் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்ததே தவிர நேற்று மாலை வரை மழையை காணோம்.