/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாணவர் மாதிரி பார்லிமென்ட் தேர்தல்
/
மாணவர் மாதிரி பார்லிமென்ட் தேர்தல்
ADDED : ஜூலை 11, 2024 05:20 AM
திருநகர்: திருநகர் முத்துத்தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு தலைமை பண்புகளை வளர்க்கவும், பிரச்னைகளுக்கு அவர்களே தீர்வு காணவும், சிறந்த, சரியான முடிகள் எடுக்கவும், எதிர்காலத்தில் வெற்றிகரமாக திட்டமிடுவதற்கும் மாணவர்கள் மாதிரி பார்லிமென்ட் தேர்தல் நடந்தது.
பொதுத் தேர்தல்கள் நடப்பது போன்று, மாணவ வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கி, ஓட்டுச்சாவடிகள் அமைத்து, வாக்காளர்களுக்கு விரலில் அடையாள மை வைத்து, ஓட்டுப்பதிவு, ஓட்டு எண்ணிக்கை, முடிவுகள் அறிவித்தல் நடைமுறைகள் பின்பற்றப்பட்டன.
பிரதமர் பதவிக்கு 5 பேர், துணை பிரதமர் பதவிக்கு 7 பேர் போட்டியிட்டனர். பிளஸ் 2 மாணவர் சர்ஜித் பிரதமர், பிளஸ் 1 மாணவர் விஷால் துணை பிரதமர் ஆக தேர்வு செய்யப்பட்டனர்.
வெற்றி வாய்ப்பை இழந்த மாணவர்கள் ஜீவா, ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டு அமைச்சர், பரத் உடற்கல்வி மற்றும் உள்ளரங்க விளையாட்டுத்துறை அமைச்சர், முஹம்மது ஆஸிப் ஷமீர் கலை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர், சபரி, அறிவியல் சார் தொழில்நுட்பத்துறை அமைச்சர், ரித்தீஸ்குமார் உடல்நலம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர், ஜீவகுமாரன் தேர்வுகள் மற்றும் போட்டிகள் ஒருங்கிணைப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டனர்.
பிளஸ் 1 மாணவர் அழகர் கல்வி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர், ஜின்னா முகமது பாதுகாப்புத்துறை மற்றும் போக்குவரத்து மேலாண்மைத்துறை அமைச்சர், கோகுல் உணவு மற்றும் சீருடை நெறிப்படுத்தும் அமைச்சர், சச்சின் விருந்தினர் நலம் பேணல் ஒருங்கிணைப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டனர். தேர்தல் தலைமை அதிகாரியாக தலைமை ஆசிரியர் ஆனந்த், தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக ஆசிரியர்கள் செயல்பட்டனர்.
ஜூலை 26ல் பள்ளியில் நடக்கும் அறிவியல் கண்காட்சியில் பதவிப்பிரமாணம் நடக்கிறது. மாணவ பிரதமர், துணை பிரதமர், அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்களை பள்ளித் தலைவர் சரவணன், செயலர் கண்ணன், இயக்குனர் நடன குருநாதன் வாழ்த்தினர்.