ADDED : ஜூலை 14, 2024 05:14 AM
மதுரை : மதுரை நகர கூட்டுறவு வங்கி கலைக்கப்பட்டு 19 ஆண்டுகளாகியும் பணிக்கொடை இன்னும் விடுவிக்கவில்லை என கூட்டுறவுத் துறை மண்டல இணைப்பதிவாளர் குருமூர்த்தியிடம் முன்னாள் பணியாளர்கள் மணிகண்டன், ரவி, ராமசாமி, உக்கிரபாண்டி, தவமணி மனு அளித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
1998ல் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் 100 பேர் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். வங்கியில் அனைத்து கடன்களும் வழங்கப்பட்ட நிலையில் வங்கிக்கடனில் முறைகேடு ஏற்பட்டதால் 2005ல் வங்கி கலைக்கப்பட்டது.
பணியாளர்களின் மூன்றாண்டு சம்பளம், பணிக்கொடை ரூ.3 கோடியே 30 லட்சம் தரவேண்டியுள்ளது. பணிக்கொடை தொகை கடந்தாண்டு ஜூனில் எல்.ஐ.சி., அலுவலகத்தில் இருந்து மதுரை நகர கூட்டுறவு வங்கி கணக்கில் வைக்கப்பட்டு ஓராண்டாகிறது.
கலைத்தல் அலுவலரிடம் பல முறை மனு கொடுத்தும் தணிக்கை முடிந்தபிறகே தரமுடியும் என்பதால் இணைப்பதிவாளர் மனிதாபிமான அடிப்படையில் பணிக்கொடையை விடுவிக்க வேண்டும் என்றனர்.

