/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கோயில்களுக்கு ரூ.பல கோடி அபராதத்துடன் ஜி.எஸ்.டி., வரி; அலறும் அறநிலையத்துறை
/
கோயில்களுக்கு ரூ.பல கோடி அபராதத்துடன் ஜி.எஸ்.டி., வரி; அலறும் அறநிலையத்துறை
கோயில்களுக்கு ரூ.பல கோடி அபராதத்துடன் ஜி.எஸ்.டி., வரி; அலறும் அறநிலையத்துறை
கோயில்களுக்கு ரூ.பல கோடி அபராதத்துடன் ஜி.எஸ்.டி., வரி; அலறும் அறநிலையத்துறை
ADDED : மார் 09, 2025 03:39 AM
மதுரை : ஹிந்து சமய அறநிலையத்துறையின்கீழ் உள்ள வருவாய் வரக்கூடிய கோயில்களுக்கும் ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தாத கட்டணத்தையும், அபராதத்தையும் சேர்த்து ரூ.பல கோடி வரி செலுத்த வேண்டும் என ஜி.எஸ்.டி., மற்றும் மத்திய கலால் வரி தெரிவித்துள்ளது.
அறநிலையத்துறையின்கீழ் அதிக வருவாய் தரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.,) 2017ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
அப்போது கோயில்கள் மதம் தொடர்பானவை என்பதாலும், மக்களுக்கு சேவை செய்து வருவதாலும் விலக்கு அளிக்கப் பட்டது. கடந்தாண்டு ஜி.எஸ்.டி., வசூலிப்பில் சில மாற்றம் செய்யப்பட்டது. குறிப்பாக குத்தகைதாரரிடமிருந்து பெறப்பட்ட வாடகை வருமானத்தில் உரிமையாளர் ஜி.எஸ்.டி., 18 சதவீதம் செலுத்த வேண்டும்.
இதன்அடிப்படையில் கோயில்களும் ஜி.எஸ்.டி., வரி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில்களில் பிரசாதம், தரிசன கட்டணம், தங்கும் விடுதி போன்றவை வருமானம் வரக்கூடியவை. இதை சேவையாக செய்து வருவதாக கோயில் நிர்வாகம் கூறினாலும் அது சந்தை மதிப்புடன் ஒப்பிடும்போது ஒரேமாதிரியான கட்டணம், விலை என்பதால் ஜி.எஸ்.டி., வரி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தவிர மதுரை மீனாட்சி அம்மன், சமயபுரம் மாரியம்மன், பழநி தண்டாயுதபாணி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி உள்ளிட்ட சில முக்கிய கோயில்களுக்கு ரூ.பல கோடி மதிப்புள்ள நிலங்கள் பல்வேறு இடங்களில் உள்ளன. பல ஏக்கர்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.
இதன்மூலம் கோயில் நிர்வாகங்கள் வருவாய் ஈட்டுவதால் அதற்கும் ஜி.எஸ்.டி., வரி செலுத்த வேண்டும்.
ஜி.எஸ்.டி., அறிமுகப்படுத்தப்பட்ட 2017 முதல் இதுவரை எந்த வரியும் செலுத்தாததால் 8 ஆண்டுகளில் செலுத்த வேண்டிய வரி, அதற்கான அபராதம் என ஒவ்வொரு கோயில்களுக்கும் ரூ.பல லட்சம் முதல் ரூ.பல கோடி வரை வரி நிர்ணயித்து நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்துள்ள அறநிலையத்துறை, 'பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை அடிப்படையிலும், மதரீதியாகவும் செயல்படக்கூடியது கோயில். வணிக நோக்கத்துடன் செயல்படவில்லை' என ஜி.எஸ்.டி., அதிகாரிகளிடம் விளக்குவது குறித்து ஆலோசித்து வருகிறது.