/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குடிநீர் தொட்டியில் சாணம் கலக்கப்பட்டதாக வழக்கு அரசு மனு தாக்கல் செய்ய உத்தரவு
/
குடிநீர் தொட்டியில் சாணம் கலக்கப்பட்டதாக வழக்கு அரசு மனு தாக்கல் செய்ய உத்தரவு
குடிநீர் தொட்டியில் சாணம் கலக்கப்பட்டதாக வழக்கு அரசு மனு தாக்கல் செய்ய உத்தரவு
குடிநீர் தொட்டியில் சாணம் கலக்கப்பட்டதாக வழக்கு அரசு மனு தாக்கல் செய்ய உத்தரவு
ADDED : மே 09, 2024 08:40 AM
மதுரை : புதுக்கோட்டையில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக எழுந்த புகாரில் அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.
புதுக்கோட்டை கறம்பக்குடி சண்முகம் மனு: புதுக்கோட்டை சங்கம்விடுதி கிராமத்தில் ஏப்., 25ல் குடிநீர் மேல்நிலை நீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அந்த நீரை அருந்திய பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை டி.எஸ்.பி., கந்தர்வக்கோட்டை இன்ஸ்பெக்டர் நீரின் மாதிரியை ஆய்விற்கு அனுப்பினர். அவர்கள் முறையாக விசாரிப்பதாக தெரியவில்லை. இப்பகுதியில் இரட்டை டம்ளர் முறை நடைமுறையில் உள்ளது. விசாரணையை வேறு சிறப்பு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.
பட்டியலின மக்கள் புதுக்கோட்டை திருமண மண்டபங்களை பயன்படுத்தவும், வைராண்டி கண்மாயில் குளிக்கவும் உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
நீதிபதிகள் வேல்முருகன், தனபால் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் 'சங்கம்விடுதியில் அனைத்து சமுதாயத்தினரும் ஒற்றுமையுடன் உள்ளனர். நீர் பரிசோதனையில் சாணம் கலக்கப்படவில்லை. பாசி படர்ந்தே உள்ளது' என தெரிவிக்கப்பட்டது.
நீதிபதிகள் பாசி எவ்வாறு வந்தது. குடிநீர் தொட்டிகள் இப்படி தான் பராமரிக்கப்படுகின்றனவா' என கேள்வி எழுப்பி, அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மே 15க்கு வழக்கை ஒத்திவைத்தனர்.