ADDED : ஆக 12, 2024 03:19 AM
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் பகுதிகளில் பெய்துவரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து, உழவுப் பணிகளை துவக்கி உள்ளனர்.
வழக்கமாக விவசாயிகள் ஆடி 18 அன்று நெல் நாற்று பாவுவதும், காய்கறிகள் பயிரிடுவதும் வழக்கம்.
இந்தாண்டு மழை இல்லாததாலும், கண்மாய்கள் வறண்டு கிடப்பதாலும் விவசாயிகள் சாகுபடி பணிகளை துவக்கவில்லை.
விவசாயிகள் கூறுகையில், ''கடந்த ஆண்டுகளில் கண்மாய்களில் தண்ணீர் இருந்ததால் கோடை உழவு செய்து ஆடி 18 ல் பணிகளை துவக்க தயாராக இருந்தோம். மழை பெய்யாததால் பணிகள் துவக்கவில்லை. இந்தாண்டும் மழை பெய்யும் என நம்பிக்கையில் பலர் கோடை உழவு செய்துள்ளனர். ஆடி பதினெட்டு நடவுக்காக விதை நெல்கள், காய்கறிகள் விதைகள் வாங்கி தயாராக இருந்தோம். மழை பெய்யாததாலும் கிணறுகள், ஆழ்குழாய்களில் தண்ணீர் குறைவாக இருப்பதாலும் நாற்றுப் பாவுதல், காய்கறி விதைக்கவும் இல்லை.
சில நாட்களாக பெய்து வரும் மழை உழவுக்கு உதவியாக உள்ளது. பலர் உழவு செய்ய துவங்கியுள்ளனர். பலர் உழவுக்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மழை பெய்தால் அடுத்த கட்ட பணிகளை துவக்குவோம் என்றனர்.