/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தேவன்குறிச்சி மலையில் பாரம்பரிய நடைபயணம்
/
தேவன்குறிச்சி மலையில் பாரம்பரிய நடைபயணம்
ADDED : ஏப் 30, 2024 05:32 AM
மதுரை: மதுரை தானம் அறக்கட்டளையின் வளர்ச்சிக்கான சுற்றுலா மையம் சார்பில் தேவன் குறிச்சி அக்னீஸ்வரர் மலைக்கோயிலில் பாரம்பரிய நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.
திருமங்கலம் மானாவாரி விவசாயம் மண்டலம், பேரையூர் வட்டார உழவரகம், கல்லுப்பட்டி வட்டார வயலக மக்கள் அமைப்பினர் ஏற்பாடுசெய்தனர். மாவட்ட சுற்றுலா அலுவலர் ஸ்ரீபாலமுருகன், தேவன்குறிச்சி குறித்த கையேட்டை வெளியிட டிராவல்ஸ் கிளப் தலைவர் கிரகாம்பெல் பெற்றுக்கொண்டார்.
கோயில்களின் சிறப்பு, வரலாற்று பின்னணி குறித்து பேராசிரியர் சேதுராமன், தொல்லியல் ஆய்வாளர் வேதாச்சலம் கூறியதாவது: மதுரையிலிருந்து 45 கி.மீ., தொலைவில் டி. கல்லுப்பட்டிக்கு மேற்கே 2.5 கி.மீ. தொலைவில் உள்ளது தேவன்குறிச்சி. மலையின் தென், வடபுறங்களில் 1976- --- 77ல் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி முடிவுகள் தேவன்குறிச்சி மலைப்பகுதியைச் சார்ந்த பகுதிகள் 6000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என உறுதிப்படுத்துகின்றன.
இங்கு பளபளப்பான சிறிய கற்களால் ஆயுதங்கள் செய்து மனிதர்கள் வேட்டையாடி வாழ்ந்துள்ளனர். 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்கள் பயன்படுத்திய கருப்பு சிவப்பு மண்பாண்டங்கள், வெள்ளை கோடுகள் தீட்டிய மண்பாண்டங்கள், அரிய கல்மணிகள், சங்கு வளையல்கள் தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.
இங்கிருந்த சமணப்பள்ளி அழிந்துவிட்டது. எஞ்சிய கட்டடங்களில் சமண தீர்த்தங்கரின் நின்ற, அமர்ந்த கோலங்கள் கிடைக்கப்பட்டுள்ளன. தேவன்குறிச்சி குன்றில் அக்னீஸ்வரர் சிவன் கோயில் பிற்கால பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டு நாயக்கர் காலத்தில் திருத்தி கட்டப்பட்டது என்றனர்.
பங்கேற்றவர்களுக்கு பாரம்பரிய உணவு வழங்கப்பட்டது. ஊடக ஒருங்கிணைப்பாளர் வாசுநாதன் ஒருங்கிணைத்தார்.

