/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஓட்டுப்பதிவு
/
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஓட்டுப்பதிவு
ADDED : ஏப் 20, 2024 05:45 AM

மதுரை: சோழவந்தானில் மின்கம்பி அறுந்து மின்தடை ஏற்பட்டதால், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஓட்டுப்பதிவு நடந்தது.
மதுரை மாவட்டத்தில் நேற்று நடந்த தேர்தலின் போது நமது நிருபர்கள் குழு வலம் வந்து சேகரித்த தகவல்கள்:
* உசிலம்பட்டி, சிந்துபட்டி, ஓணாப்பட்டி, தனியாமங்கலம், மேலக்கால், விளாச்சேரி, திருவாதவூர் பகுதிகளில் ஓட்டுப்பதிவுஇயந்திரம் வேலை செய்யாததால் பதிவு தாமதமானது.
* புலிமலைப்பட்டியில் கன்ட்ரோல் யூனிட் கைதவறி விழுந்ததால், புதிய யூனிட் மாற்றப்பட்டது. இதனால் பதிவு தாமதமானது.
* ஆரப்பாளையம் பள்ளியில் ஓட்டளிக்க வந்த மேயர் இந்திராணி, அவரது கணவர் பொன்வசந்த் உடைகளில் மா.கம்யூ., சின்னமான அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் இருந்தது.
* சக்கிலியங்குளத்தில்போடி ரயில் பாதை குறுக்கிடுவதால், ஓட்டுச்சாவடிக்கு 2 கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டி இருக்கிறது, அதில் முன்புபோலவே ரோடு வேண்டும் எனக்கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
* சோழவந்தானில் மின்கம்பி ரோட்டில் அறுந்து விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஓட்டுப்பதிவு நடந்தது. ஒரு மணி நேரத்திற்கு பின் மின்சாரம் வந்தது.
* பா.ஜ., வேட்பாளர்ராதிகா, தே.மு.தி.க., வேட்பாளர் விஜய பிரபாகரன் ஆகியோர் சென்னையில் ஓட்டுப்பதிவு செய்தபின், ஒரே விமானத்தில் மதுரைக்கு வந்தனர்.
* ஜெய்ஹிந்துபுரம் நேதாஜி ரோடு அய்யனார்பள்ளி ஓட்டுச்சாவடி அருகே துணைமேயர் நாகராஜன், காஸ் சிலிண்டரை துாக்கி காண்பித்துக்கொண்டிருந்தார். ஓட்டளிக்கச் செல்வோரிடம் 'காஸ் சிலிண்டர் விலையை நினைத்துப்பாருங்கள்' என்று பிரசாரம் செய்வதாக கூறி, அவருடன் பா.ஜ.,வினர் வாக்குவாதம் செய்தனர்.
* மேலுார் ஓட்டுச் சாவடிகளில் நகராட்சி சார்பில்குடிநீருடன் சிறப்பு மோர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.
* திருப்பாலை ஜெயின் வித்யாலயா பள்ளி போன்று ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் ஒரு 'பிங்க் பூத்' அமைக்கப்பட்டு இருந்தது. இதில் முழுக்க பெண்களே ஓட்டுப்பதிவு அலுவலர்களாக பணியாற்றினர்.
* உலகனேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உட்பட ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும்ஒரு 'மாதிரி ஓட்டுச்சாவடி' அமைத்து இருந்தனர். இதில் வாக்காளரை வரவேற்கும் வகையில் வண்ண பலுான்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
* உசிலம்பட்டி நகராட்சி வார்டு 2 தற்போது கவுன்சிலர் தி.மு.க., வைச்சேர்ந்த முருகன் 55. இரண்டாவது வார்டில் இவருக்கு பூத் சிலிப் வரவில்லை. ஒன்றாவது வார்டில் பெயர் வரும் என அதற்கான வாக்காளர் பட்டியலிலும் பெயரை தேடினார். அதிலும் பெயர் வரவில்லை. தனது பெயரை நீக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்.டி.ஓ., விடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

