ADDED : மே 11, 2024 06:03 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 273 கன அடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து, தென்பெண்ணை ஆற்றில் நீர் திறக்கப்படவில்லை.
கர்நாடகா மாநில நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், நேற்று காலை அணைக்கு நீர்வரத்து, 390 கன அடியாக அதிகரித்தது.
அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில், 50 கன அடி நீர் மட்டும் திறந்து விடப்பட்டது. மீதமுள்ள, 340 கன அடி நீர் அணையில் சேமிக்கப்பட்டது. வரும் ஜூலை மாதம் அணையில் இருந்து, முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும். அணையின் நீர்மட்டம், 38 அடி இருந்தால் மட்டுமே பாசனத்திற்கு நீர் திறக்க முடியும்.
நேற்று காலை நிலவரப்படி, அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 31.98 அடிக்கு நீர் இருப்பு இருந்தது. அணையில் கூடுதல் நீரை சேமிக்கும் வகையில், தென்பெண்ணை ஆற்றில் நேற்று, 50 கன அடி நீர் மட்டுமே திறந்து விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.