/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
14 ஒன்றியங்களில் 70 எக்டேரில் 180 டன் சீமைக்கருவேல மரங்கள்
/
14 ஒன்றியங்களில் 70 எக்டேரில் 180 டன் சீமைக்கருவேல மரங்கள்
14 ஒன்றியங்களில் 70 எக்டேரில் 180 டன் சீமைக்கருவேல மரங்கள்
14 ஒன்றியங்களில் 70 எக்டேரில் 180 டன் சீமைக்கருவேல மரங்கள்
ADDED : ஜூலை 05, 2025 12:54 AM
மதுரை; மதுரை மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர். முதற்கட்டமாக ஒன்றியத்திற்கு 2 கிராமங்கள் வீதம் 70.3 எக்டேரில் உள்ள 180 டன் சீமைக்கருவேல மரங்களை அகற்ற கலெக்டர் பிரவீன் குமார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் வெளிநாட்டு ரகத்தைச் சேர்ந்த சீமைக்கருவேல மரங்கள் கண்மாய்கள், குளங்கள், தரிசு நிலங்கள், அரசு புறம்போக்கு, தனியார் நிலங்கள் என எங்கும் நீக்கமற நிறைந்துள்ளன. இதன் வேர் நுாறு, 200 அடி ஆழம் வரை புகுந்து தண்ணீரை உறிஞ்சும் தன்மையுள்ளவை.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் விரைவாக குறையும் அபாயம் உள்ளது. விறகு தவிர வேறெந்த பயன்பாடும் இல்லாத இம்மரங்களால் நாட்டுப் பயிர்களும் பாதிக்கும். எனவே இவற்றை அகற்றுவது அவசியம்.
இதுதொடர்பான வழக்கில் நீதிமன்றங்களும் அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளன.
எனவே மதுரை நிர்வாகமும் செயல்படுத்த தீவிரம் காட்டியுள்ளது. புதிய கலெக்டர் பிரவீன்குமார் உள்ளாட்சி, வனத்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். சிறப்பு நடவடிக்கையாக ஒரு ஒன்றியத்திற்கு தலா 2 கிராமங்களை தேர்வு செய்ய உத்தரவிட்டுள்ளார்.
அங்கு புறம்போக்கு, தனியார், நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை கணக்கெடுக்க வேண்டும்.
அதனை பொதுப்பணித்துறை மதிப்பீடு செய்து விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அவற்றை யாரும் ஏலம் மூலம் பெறலாம். ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அவை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பின் அக்கிராமங்கள் 'சீமைக்கருவேல மரங்கள் இல்லா கிராமங்கள்' என அறிவிக்கப்படும்.
இவ்வகையில் உடனேயே அனைத்து ஒன்றியங்களிலும் கணக்கெடுக்கப்பட்டன.
14 ஒன்றியங்களின் 28 கிராமங்களில் 70.3 எக்டேர் நிலங்களில் சீமைக்கருவேல மரங்கள் உள்ளன. அவை 180 டன் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றை அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து விலை நிர்ணயம் செய்யப்படும்.
அதன்பின் ஏலத்தில் விட்டு அத்தொகை அந்தந்த உள்ளாட்சி மன்றங்களிடம் ஒப்படைக்கப்படும்.
இப்பணியை தொடர்ந்து செய்வதன் மூலம் மாவட்டம் முழுவதும் சீமைக்கருவேல மரங்கள் முழுவதுமாக ஒழிக்கப்படும்.