ADDED : பிப் 12, 2024 05:11 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் திருமண மண்டபங்களில் நேற்று 200க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தது. உறவினர் கூட்டத்தால் நகருக்குள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 49 பதிவு திருமணங்களும், 50க்கும் மேற்பட்ட பரிகார திருமணம், பதிவில்லா திருமணங்களும் நடந்தது. மேலும் ஊருக்குள் உள்ள மண்டபங்களிலும் நுாற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தன.
இதனால் கோயிலுக்குள் சுவாமி தரிசனம் செய்வதற்கும் மிகுந்த நெருக்கடி ஏற்பட்டது. திருப்பரங்குன்றத்தில் தெப்பக்குளம் பகுதியைத் தவிர வாகன காப்பகம் இல்லாததால் திருமணம், சுவாமி தரிசனத்திற்கு வந்தவர்களின் வாகனங்கள் ரத வீதிகளிலும், ஜி.எஸ்.டி., மெயின் ரோடு பகுதியிலும் நிறுத்தப்பட்டன.இதனால் பொதுப் போக்குவரத்து கடுமையாக பாதித்தது.
இரண்டு பாலங்களுக்கும் இடைப்பட்ட மெயின் ரோட்டிலுள்ள திருமண மண்டபங்கள் முன்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டதாலும் மெயின் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.