/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வைகையாற்றை நோக்கி ஒரு பயணம் நீரில்லை, மணல் இல்லை, மரமில்லை
/
வைகையாற்றை நோக்கி ஒரு பயணம் நீரில்லை, மணல் இல்லை, மரமில்லை
வைகையாற்றை நோக்கி ஒரு பயணம் நீரில்லை, மணல் இல்லை, மரமில்லை
வைகையாற்றை நோக்கி ஒரு பயணம் நீரில்லை, மணல் இல்லை, மரமில்லை
ADDED : நவ 13, 2024 04:13 AM

மதுரை: வைகையாற்றின் உயிர்ச்சூழல் குறித்து மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை உறுப்பினர்கள் ஆய்வு செய்தபோது 'சுத்தமான நீரில்லை, மணல் இல்லை, மரங்கள் இல்லை' என ஆவணப்படுத்தியுள்ளனர்.
பறவையியலாளர் ரவீந்திரன், சூழலியல், தாவரவியல், காட்டுயிர் ஆய்வாளர்கள் தமிழ்தாசன், கார்த்திகேயன், விஸ்வநாத் குழுவினர் வைகையாறு உற்பத்தியாகும் வருஷநாடு, மூல வைகையில் இருந்து கடலில் கலக்கும் ராமநாதபுரம் ஆற்றங்கரை வரை 10 நாட்கள் பயணம் செய்தனர். கள ஆய்வு குறித்து அவர்கள் கூறியதாவது:
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 134 ஊர்களில் களஆய்வு செய்தோம். 36 இடங்களில் ஆற்றின் நீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்தோம்.
காவிரியில் காணும் நீர் நாய்கள் மூல வைகையின் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளன. நீர்நாய்கள், மான், கீரி உட்பட 35 வகை பாலுாட்டிகள் வைகையாற்றை வாழிடமாக கொண்டு வாழ்கின்றன. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் அழியும் இனங்களின் பட்டியலில் நீர் நாய்களை வரையறை செய்துள்ளதால், அவற்றின் வாழிடத்தை பாதுகாக்க கவனம் செலுத்த வேண்டும். அதுமட்டுமின்றி 18 வகை காட்டுயிர்கள் அழிவை சந்திக்கும் சிவப்பு பட்டியலில் உள்ளன.
மரங்களின் வகைப்பாடு
45 வகை மரங்கள், 6 வகை செடிகள், 4 வகை அலையாத்தி காட்டு தாவரங்கள் உட்பட 67 வகையான தாவரங்கள் உள்ளன. மதுரை மாநகராட்சி எல்லைக்குள் வைகையின் இரு கரைகளில் 8 கி.மீ., துாரத்திற்கு ஆற்றங்கரை மரங்களே இல்லை. ஆற்று நன்னீரில் காணப்படும் காஞ்சி மரங்கள் துவரிமான் பகுதியில் மட்டும் காணப்படுகிறது. அடர்ந்திருந்த மருதம், கடம்பம், நாவல், புங்கமரங்கள் அகற்றப்பட்டுள்ளன.
நாணல் புற்கள், பேய்க்கரும்பு புற்கள் மதுரையில் காணப்படவில்லை. தேனி முதல் துவரிமான் வரையும், திருப்புவனம் துவங்கி மந்தி வலசை வரையும் நாணற்புற்கள் வளர்கின்றன. மாசுபட்ட நீரில் வளரும் சம்பை புல், ஆகாயத்தாமரை பரவலாக வளர்ந்துள்ளது.
ஆவணப்படுத்திய 175 வகை பறவைகளில் 125 வகை ஆறு, அதன் பரப்பை சார்ந்து வாழும் பறவைகள். 50 வகை வலசை பறவைகள், 12 வகை அழியும் பட்டியலில் உள்ள பறவைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. நன்னீரில் வாழும் வெண்கொக்கு, செந்நாரை பறவை எண்ணிக்கை குறைந்துள்ளன. கழிவுநீர் தாவரம், புழு, பூச்சிகளை உண்ணும் நாமக்கோழி, அரிவாள் மூக்கன் பறவைகள் அதிகரித்துள்ளன.
58 வகை நன்னீர் மீன்களில் 11 வகை அயல் மீன்கள், 11 வகை அழிவு பட்டியலில் உள்ளவை. 1989ல் அப்போதைய பிரதமர் இந்திராவால் ஆவணம் செய்யப்பட்ட 19 வகை மீன்களை காணமுடியவில்லை. பாக் ஜலசந்தி, வங்கக்கடலில் வைகை கலக்கும் கழிமுகப் பகுதியில் மீன், இறால், திருக்கை உள்ளிட்ட 86 வகை உவர்நீர் உயிரினங்கள் ஆவணம் செய்யப்பட்டன. ராமநாதபுரம் ஆற்றங்கரையில் இறால் பண்ணைகளின் கழிவுநீர் நேரடியாக விடப்படுவதால் கழிமுக உயிரினங்களின் உயிரிச்சூழல் பாதிக்கப்படுகிறது.
ஆற்றுமணல் காணவில்லை
தேனி அம்மச்சியாபுரம் துவங்கி அணைக்கரைப்பட்டி வரை, மதுரை விளாங்குடி துவங்கி சிலைமான் வரை ஆற்றுமணல் பரப்பு இல்லை. மாநகராட்சியில் வெண்மணல் பரப்பை காணவில்லை. மதுரையில் 64 இடங்கள், திண்டுக்கல்லில் 2, தேனியில் 18, ராமநாதபுரத்தில் 64, சிவகங்கையில் 29 இடங்கள் என மொத்தம் 177 இடங்களில் 197 குழாய்கள் மூலம் வைகையாற்றுக்குள் கழிவுநீர் நேரடியாக கலப்பதை ஆவணப்படுத்தியுள்ளோம். 36 இடங்களில் நீரின் மாதிரி சேகரித்து ஆய்வு செய்த போது குடிக்கும் தரத்தில் இல்லை. எங்களது ஆய்வை கலெக்டர் சங்கீதாவிடம் கொடுத்துள்ளோம். இனி மாவட்ட நிர்வாகம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

