ஸ்டாலின் குடும்ப கஜானா உயர்ந்துள்ளது அ.தி.மு.க., மருத்துவரணி குற்றச்சாட்டு
ஸ்டாலின் குடும்ப கஜானா உயர்ந்துள்ளது அ.தி.மு.க., மருத்துவரணி குற்றச்சாட்டு
ADDED : மே 25, 2025 10:56 PM
மதுரை: தமிழகத்தில் டாஸ்மாக், மின்சார வாரியம் உட்பட பல்வேறு துறைகளில் நடந்த முறைகேடுகளால் மாநிலத்திற்கே பட்ஜெட் போடும் வகையில் முதல்வர் ஸ்டாலினின் குடும்ப கஜானா உயர்ந்துள்ளது என அ.தி.மு.க., மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் குற்றம்சாட்டினார்.
அவர் கூறியதாவது: தி.மு.க., ஆட்சியில் கமிஷன், கரப்ஷன், கலெக் ஷன் நடப்பதை அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி அம்பலப்படுத்தி வருகிறார். ஸ்டாலின் மவுனம் காக்கிறார். ரூ.30 ஆயிரம் கோடி விவகாரம் குறித்து ஒரு அமைச்சர் பேசிய ஆடியோ வெளியானது.
பொங்கல் பரிசு வழங்குவது, சென்னை மழைநீர் வடிகால் அமைப்பது, மின்சாரம் கொள்முதல், நகராட்சி துறை என ரூ.பல கோடிகளில் முறைகேடு நடந்துள்ளது. டாஸ்மாக்கில் மது பாட்டில் ரூ.10 கூடுதலாக விற்று நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடி முக்கிய புள்ளிக்கு செல்கிறது. இதுதொடர்பான முறைகேடுகளை அமலாக்கத்துறை வெளிகொண்டு வந்துள்ளது. ஓட்டுப் போட்ட மக்களுக்கு விலைவாசி உயர்வை மட்டும் தந்துவிட்டு தன் குடும்பத்தை வளப்படுத்துகிறார் ஸ்டாலின் என்றார்.

