ADDED : அக் 27, 2024 04:23 AM

மதுரை : மதுரையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செல்லுார் பகுதியில் ஆய்வு செய்த அமைச்சர் மூர்த்தியும், அ.தி.மு.க., முன்னாள்அமைச்சர் செல்லுார் ராஜூவும் 'எதிர்பாராதவிதமாக' சந்தித்து கொண்டனர்.
மதுரையில் தொடர் மழையால் பந்தல்குடி கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு செல்லுார் பகுதியில் மழைநீர் புகுந்தது.
நேற்று இப்பகுதியை அமைச்சர் மூர்த்தி, எம்.எல்.ஏ.,க்கள் தளபதி, வெங்கடேசன், மேயர் இந்திராணி பொன்வசந்த், கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் ஆய்வு செய்தனர். அப்போது தன் பங்குக்கு ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூவும், அமைச்சர் மூர்த்தியும் சந்தித்துக்கொண்டனர்.
அப்போது 'பந்தல்குடி கால்வாயை துார்வார மதிப்பீடு செய்த ரூ.86 கோடியை ஒதுக்க அரசிடம்வலியுறுத்துங்க' என மூர்த்தியிடம் செல்லுார் ராஜூ கூற 'அதுகுறித்து ஏற்கனவே அமைச்சர் துரைமுருகன் அறிவித்துவிட்டார்'என தளபதி கூறினார்.
சில நிமிடங்கள் வெள்ளப்பாதிப்பு குறித்து விவாதம் நடந்தது. பின்னர் 'மற்றொரு இடத்தில் தோண்டும் பணி நடக்கிறது. அங்கு செல்கிறேன்' என செல்லுார் ராஜூவிடம்கூறிவிட்டு மூர்த்தி கிளம்பினார்.
பின்னர் நிருபர்களிடம் செல்லுார் ராஜூ கூறியதாவது:
1993ல் இதைவிட அதிக கனமழை செல்லுார்பகுதிகளில் பெய்தது. இப்பகுதியில் 6 அடியில் இருந்து 7 அடி உயரத்திற்கு வெள்ளம் வரும். தி.மு.க., ஆட்சியில் 3 ஆண்டுகளாக பொதுப்பணித்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா என்று சொல்வது போல், இந்த அரசு ஏற்கனவே விழித்துக் கொண்டிருந்தால் இந்த அளவுக்கு பாதிப்பு வந்திருக்காது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் கொடுக்க வேண்டும். இரண்டு மாதத்திற்கு முன்பு மாநகராட்சியில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் இதுகுறித்து மனு கொடுத்தோம். செல்லுார் பகுதி வாய்க்கால்களை துார் வாருங்கள் என்று கலெக்டரிடம் மனு கொடுத்தோம்.
மழை வந்த பிறகு நடவடிக்கை எடுக்கிறார்கள். மாவட்ட நிர்வாகத்தின் கவனக்குறைவு உள்ளது. பணி நிறைவாக இல்லை. அமைச்சர் மூர்த்தி இந்த பிரச்னை சரி செய்யப்படும். பாதிப்பு இருக்காது என்று சொல்கிறார். ஆண்டவனுக்கு தான் வெளிச்சம். இவ்வாறு கூறினார்.