தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ டாக்டரை கேளுங்கள்

 டாக்டரை கேளுங்கள்

 டாக்டரை கேளுங்கள்


ADDED : பிப் 22, 2026 06:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2026 06:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

n என் மகனுக்கு 6 வயது ஆகிறது. 4 வயதில் அடினாய்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இப்போதும் இரவில் குறட்டை விடுகிறான். ஆனால் வாயை மூடி வைத்துக் கொண்டால் மூக்கின் வழியாக சுவாசிக்கிறான். இதற்கு தீர்வு உள்ளதா.

-- போத்திராஜ் அருப்புக்கோட்டை

அடினாய்டு என்பது மூக்கின் பின்புறமுள்ள சதை. அதை பாரம்பரிய முறையில் அறுவை சிகிச்சை செய்த பின்னும் சிறிதளவு உட்பகுதியில் ஒட்டியிருக்கும். அந்த குழந்தைக்கு மீண்டும் அலர்ஜி, தொற்று ஏற்பட்டால் மீதமுள்ள அடினாய்டு சதை பெரிதாகி விடும். அதனால் மறுபடியும் குறட்டை தொந்தரவு வரலாம். அலர்ஜி இருந்தால் அறுவை சிகிச்சைக்கு பின், அலர்ஜிக்கான மருந்தை ஸ்பிரே செய்ய வேண்டும். குழந்தைக்கு சொத்தைப்பல் இருந்தாலும் அதை சரிசெய்ய வேண்டும். தொற்று வராமல் பராமரிப்பது அவசியம். இவ்வளவு நாள் மூக்கினால் மூச்சுவிடாமல் வாயினால் மூச்சுவிட பழகியிருப்பர். அதனால் வாயைத் திறந்தே மூச்சுவிடுவர்.

அறுவை சிகிச்சை செய்த சில நாட்கள் கழித்து துாங்கும் போது வாயை மூடிவிட பழக வேண்டும். அதன் பின் மூக்கினால் மூச்சுவிட பழகுவர். உங்கள் குழந்தையின் வாயை மூடிவிட வேண்டியுள்ளது என்றால் அடினாய்டு பெரிதாக இல்லை என்று அர்த்தம். எனவே கவலைப்படாமல் கவனமாக வாயை மூடிவிட வேண்டும்.

அடினாய்டு மீண்டும் பெரிதாக உள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும். அடினாய்டு பெரிதாக இருந்தால் 'காப்லைட்டர்' கருவி மூலம் துல்லியமாக அகற்ற முடியும்.

- டாக்டர் அருள் சுந்தரேஷ்குமார் டீன் மதுரை அரசு மருத்துவமனை

* எனது மகனுக்கு 6 வயதாகிறது. சாக்லேட், இனிப்புகள் அதிகம் சாப்பிட்டதால் வாய் முழுவதும் பூச்சி பல் உள்ளது. விளையாடும் போது கீழே விழுந்ததில் மேல் அன்னவாய் முன்பற்கள் உடைந்து விட்டன. இதனால் உணவுப்பொருட்களை கடித்து சாப்பிட முடியாத நிலையில் உள்ளான். பூச்சிப்பல், பல் பாதுகாப்புக்காக 'கிளினிக்' சென்றால் பற்களின் வேர் சிகிச்சை அல்லது புதிய பற்கள் முளைக்கும் வரை பாதுகாப்பிற்காக 'கேப்' அணியலாம் என பரிந்துரைக்கின்றனர். 6 வயது சிறுவனுக்கு வேர் சிகிச்சை அவசியம் தானா என அச்சம் உள்ளது. பிரச்னையை சரிசெய்ய என்ன செய்யலாம்.

-- ஜோதி, திண்டுக்கல்

சிறுவயதில் இதுபோன்ற பாதிப்பு ஏற்படுவது இயல்புதான். ஒவ்வொரு பற்களும் குறிப்பிட்ட ஆண்டுகளில் விழுந்து முளைக்கும். 7 வயது முதல் பால் பற்கள் விழுந்து புதிய நிரந்தர பற்கள் முளைக்கும்போது இந்த பிரச்னை சரியாகும். அதற்குமுன் பற்களில் வலி, வீக்கம் குடைச்சல் என தொந்தரவு ஏற்பட்டால் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த தொந்தரவும் இல்லாமல் வேர் சிகிச்சைக்கு தயாராகும் போது, அது நிரந்தர பல் வளர்ச்சியை பாதிக்கும் அபாயம் உள்ளது. 'கேப்' பயன்படுத்தினால் பற்கள் சீரற்ற வளர்ச்சியடைந்து கோணலாகவும், தெத்துப்பல் பிரச்னை ஏற்படவும் வாய்ப்பு உண்டு. பற்களை பாதுகாக்கவும், பூச்சிப்பல் பாதிப்பு பெரிதாகாமல் கட்டுப்படுத்தவும் குழந்தைகளுக்கான 'டூத்பேஸ்ட்'கள் நிறைய கிடைக்கின்றன. மருத்துவரின் பரிந்துரையோடு தகுந்த 'டூத்பேஸ்ட்'டை காலை, இரவு என இரு நேரங்களில் பயன்படுத்துங்கள். ஆரோக்கியமான, கால்சியம் சத்துமிக்க உணவுகளை சாப்பிடக்கொடுங்கள்.

-- டாக்டர் ஆனந்த் யோகேஷ் பல்வேர் சிகிச்சை நிபுணர் திண்டுக்கல்

n என் குழந்தைக்கு 4 வயதாகிறது. பற்களில் சொத்தை ஏற்பட்டுள்ளது. இதற்கு எப்படி தீர்வு காண்பது.

- ஏ.சிவகாமி, ராமநாதபுரம்

குழந்தைகளுக்கு வாயில் உள்ள கிருமிகள், சர்க்கரை உணவுகளால் பற்களின் எனாமலை சிதைப்பதால் பல் சொத்தை ஏற்படுகிறது. ஆரோக்கியமான உணவு பழக்கம் மூலம் குழந்தைகளுக்கு பல் சொத்தை ஏற்படுவதை தவிர்க்க முடியும். பாட்டிலில் பால் கொடுப்பதால், அதில் உள்ள பைபர் பற்களை சேதப்படுத்த வாய்ப்பு உள்ளது.

இனிப்பு நிறைந்த சாக்லேட், குளிர் பானங்களை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தியவுடன் பாட்டிலில் பால் கொடுப்பதற்கு பதிலாக சத்து மாவு கரைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். பற்கள் முளைத்த பின் சுவைத்து உண்ணும் உணவுகளை கொடுக்க வேண்டும். அப்போது தான் உமிழ்நீர் சுரக்கும்.

கடின பிரஷ் கொண்டு பல் துலக்கும் போது அதில் உள்ள பிளாஷ்டிக் காரணமாக பற்கள் பாதிக்கப்படும். ஒவ்வொரு முறை உணவு உண்ட பின் நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும்.

- டாக்டர் கே.முத்துராமன் ஆயுஷ் சமுதாய நல மருத்துவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உத்தரகோசமங்கை

*குழந்தைக்கு தாய்ப்பால் எவ்வளவு நன்மை தரும். பிறந்த எத்தனை மணி நேரத்திற்குள் கொடுக்க வேண்டும்.

- க.அன்புச்செல்வி, சிவகங்கை

தாய்ப்பால் குழந்தைக்கு எளிதில் ஜீரணமாகக் கூடிய முதல் உணவு.குழந்தை பிறந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு முதல் சிறப்பு தடுப்பு மருந்தும் தாய்ப்பால். தாய்ப்பாலில் குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின், தாதுக்கள் மற்றும் ஆன்டிபயாடிக் உள்ளன. இது நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்கிறது. மலச்சிக்கலை ஏற்படுத்துவதில்லை. இதனால் குழந்தைகளுக்கு வயிற்று உபாதை குறைகின்றன.

தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஒரு உணர்ச்சிப்பூர்வமான, நெருக்கமான பிணைப்பை உருவாக்குகிறது. பிரசவத்திற்குப் பின் தாயின் உடல் விரைவில் பழைய நிலைக்குத் திரும்பவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. குழந்தைக்கு முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே வழங்க வேண்டும்.

- -டாக்டர் வெங்கட் பச்சிளம் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை

*தற்போது எனக்கு 46 வயது ஆகிறது. அடிக்கடி உடல் சோர்வு, கால் வலி ஏற்படுகிறது. இரவு துாங்கும் போது தும்மல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்.

- மாரியம்மாள், ஸ்ரீவில்லிபுத்துார்

மாதவிடாய் நிற்பதற்கு முந்தைய காலக்கட்டமான இச்சமயத்தில் சத்து குறைபாட்டால் உடல் சோர்வு, கால்வலி ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க இரும்பு, கால்சியம், புரத சத்துக்கள் அவசியம். இதற்கு முருங்கை, ஆட்டு ஈரல், பால், கீரைகள், ராகி, முட்டை, பயறு வகைகள் உட்கொள்ள வேண்டும்.

ஒவ்வாமை காரணமாக தும்மல் வரலாம். இதற்கு படுக்கை அறையை துாசி இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். படுக்கையை தினமும் உதறிய பின் உறங்க செல்லவும். படுக்கை, தலையணை விரிப்பை வாரம் ஒரு முறை நீரில் அலசி வெயிலில் உலர்த்த வேண்டும். ரத்த அளவு, சர்க்கரை அளவு, உடல் எடை, ரத்த அழுத்தம் ஆகிய பரிசோதனைகளை அரசு மருத்துவமனையில் இலவசமாக செய்து கொள்ளலாம்.

- -டாக்டர் ரூபா மகப்பேறு சிகிச்சை நிபுணர் அரசு மருத்துவர் ஸ்ரீவில்லிபுத்துார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us