/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்போர் அவதி
/
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்போர் அவதி
ADDED : டிச 26, 2024 05:07 AM
அவனியாபுரம்: அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்போர் அவற்றுக்கு நீச்சல் பயிற்சி அளிக்க மிகுந்த சிரமப்படுகின்றனர்.
அவனியாபுரம் பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கின்றனர். ஆண்டுதோறும் தை மாதம் முதல்நாளில் இங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.
2025ல் பொங்கல் நாளில் போட்டிகளில் பங்கேற்க காளைகள் இப்போதே தயாராகி வருகின்றன. இதற்காக காளைகளுக்கு நல்லதங்காள் ஊருணி, அயன்பாப்பாக்குடி கண்மாயில் நீச்சல், மண் குத்துதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுவது வழக்கம்.
காளைகள் வளர்ப்போர் கூறியதாவது: நல்லதங்காள் ஊருணியில் 2 ஆண்டுகளாக தண்ணீர் இல்லை. அயன்பாப்பாக்குடி கண்மாயில் ஆகாய தாமரைகள் சூழ்ந்து, கழிவுநீர் தேங்கி நிற்பதால் காளைகளுக்கு நீச்சல் பயிற்சி அளிக்க இயலவில்லை. அங்கு பயிற்சி அளித்தால் காளைகளின் உடல் புண்ணாகி விடுகிறது.
இதனால் திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள கல்குளம் கண்மாயில் நீச்சல் பயிற்சி அளிக்கிறோம். அக்குளம், சுற்றுப் பகுதியில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. தண்ணீரும் கலங்கலாக உள்ளது. வேறு வழியின்றி அங்கு காளைகளுக்கு நீச்சல் பயிற்சி கொடுத்தாலும், அதிக தொலைவு நீந்திச் செல்ல முடியவில்லை.
அயன்பாப்பாக்குடி கண்மாயில் ஆகாயத்தாமரைகளை அகற்றினால் அங்கு நீச்சல் பயிற்சி கொடுக்க வசதியாக இருக்கும் என காளைகள் வளர்ப்போர் வலியுறுத்தினர்.