ADDED : மே 09, 2025 04:14 AM
மேலுார்: தி.புதுப்பட்டியில் குளிக்கப் பயன்படுத்தும் உப்புத் தண்ணீரையே குடிநீராக பயன்படுத்தும் மக்களின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி வருகிறது.
தி.புதுப்பட்டியில் அறுநுாறுக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஊராட்சி சார்பில் அமைத்த ஆழ்குழாய் கிணறில் கிடைக்கும் உப்பு நீரை மேல்நிலைத் தொட்டி மூலம் குடிநீராகவிநியோகம் செய்யப்பட்டது. காலப்போக்கில் அதிக உப்பாக மாறியதால்,அந்தத் தொட்டியில் காவிரி தண்ணீரை கலந்து விநியோகித்தனர். தற்போது மோட்டார் பழுதானதால் குடிநீர் வினியோகிக்கவில்லை.
அப்பகுதி மக்கள் கூறியதாவது:
ஒரு வாரமாக மோட்டார் பழுதானதால் குளிக்கப்பயன்படும் தண்ணீரையே குடிநீராக பயன்படுத்துகிறோம். அதனால் தண்ணீர் தொடர்பான தொற்று நோய் பாதிப்பு வாய்ப்பு உள்ளது. சிலர் குடம் தண்ணீரை ரூ.12க்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.
பழுதான மோட்டாரை ஊராட்சி செயலர் கழற்றி சென்றதோடு சரி, இதுவரை பழுது நீக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் காவிரி குடிநீரை விநியோகிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.
ஊராட்சி செயலர் சுப்புராஜ் கூறுகையில், மோட்டார் பழுது நீக்கியதும் குடிநீர் சப்ளை செய்யப்படும் என்றார்.

