ADDED : மார் 16, 2024 07:26 AM
பாட்னா : பீஹாரில், கடந்த சில மாதங்களுக்கு முன், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணியை முறித்த ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதீஷ் குமார், மீண்டும் பா.ஜ., கூட்டணியில் இணைந்து முதல்வராக பதவியேற்றார்.
அப்போது, பா.ஜ.,வைச் சேர்ந்த சம்ரத் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா ஆகியோர் துணை முதல்வராக பதவியேற்றனர். மேலும் சிலர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இந்நிலையில், முதல்வர்நிதீஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. பாட்னாவில் உள்ள கவர்னர் மாளிகையில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், 21 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான ரேணு தேவி, முன்னாள் அமைச்சர்கள் மங்கள் பாண்டே, நீரஜ் குமார் சிங் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
அவர்களுக்கு கவர்னர்ராஜேந்திர அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் வாயிலாக, அமைச்சரவையின் மொத்த பலம், 30 ஆக உயர்ந்துள்ளது.

