23 ஆண்டுகளாக தொடர்கிறது ரத்த வெறி: இதுவரை 21 கொலைகள்; 4 என்கவுன்டர்
23 ஆண்டுகளாக தொடர்கிறது ரத்த வெறி: இதுவரை 21 கொலைகள்; 4 என்கவுன்டர்
UPDATED : ஜன 28, 2026 04:57 AM
ADDED : ஜன 28, 2026 12:37 AM

மதுரை: மதுரையில், சாதாரண போஸ்டர் ஒட்டும் பிரச்னையில் துவங்கி, தி.மு.க.,வை சேர்ந்த மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர் வி.கே.குருசாமி, அ.தி.மு.க.,வை சேர்ந்த மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர் ராஜபாண்டி தரப்புக்கு இடையே, 23 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கும் மோதலால், இதுவரை இரு தரப்பிலும், 21 கொலைகள், 4 என்கவுன்டர்கள் நடந்திருப்பது தமிழகத்தையே மிரள வைத்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகாவை சேர்ந்தவர்கள் குருசாமி, ராஜபாண்டி. ஒரே சமூகத்தை சேர்ந்த இவர்கள் உறவினர்களும் ஆவர். தற்போது, கீழ்மதுரை ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் குருசாமி வசிக்கிறார்.
கடந்த, 2003ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில், குருசாமி தரப்பினர் போஸ்டர் ஒட்டியதை, ராஜபாண்டி தரப்பு கிழித்ததால், முதல் கொலை நடந்தது. ராஜபாண்டி உறவினர் சின்ன முனீஸ் என்பவர் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில், பாம்பு பாண்டி, மாரிமுத்து, ராமமூர்த்தி, வழுக்கை முனீஸ், வி.கே.குருசாமி, கணுக்கன் முனியசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பதிலுக்கு பதில்
இவ்வழக்கில், ஜாமினில் வந்த குருசாமி, 2006 உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று, மதுரை மாநகராட்சி தி.மு.க., கிழக்கு மண்டல தலைவரானார். அவர் அரசியலில் கவனம் செலுத்த, பழிக்குப்பழியாக, 2008ல் சின்ன முனீஸ் கொலையில் தொடர்புடைய வழுக்கை முனீஸ் என்பவரை, ராஜபாண்டி உறவினரான சப்பாணி முருகன் கொலை செய்தார்.
'பதிலுக்கு பதில் சரியாகி விட்டது' என, போலீஸ் கருதிய நிலையில், 'அண்ணன் சின்ன முனீஸை கொலை செய்த அனைவரையும் பழி வாங்குவேன்' என, சபதமிட்ட அவரது தம்பியான வெள்ளைக்காளி, 2008ல் மாரிமுத்து, ராமமூர்த்தியை கொலை செய்தார்.
இவ்வழக்கில் கைதாகி மதுரை சிறையில் இருந்த வெள்ளைக்காளி, உறவினர் சகுனி கார்த்திக் ஆகியோருக்கு கைதி முத்து இருளாண்டி அறிமுகம் ஏற்பட, மூவரும் ஜாமினில் வந்து, 2013ல் குருசாமியின் தங்கை கணவர் பாம்பு பாண்டியை கொலை செய்தனர்.
பதிலுக்கு, சகுனி கார்த்தியின் தாய்மாமன் மயில் முருகனை, அதே ஆண்டில் குருசாமி தரப்பினர் கொலை செய்தனர். இவ்வழக்கில், குருசாமியின் மகன் வி.கே.ஜி.மணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
பழிக்குப்பழியாக, 2015ல் வி.கே.ஜி.மணியின் நண்பர் குப்பு என்ற முனியசாமியை வெள்ளைக்காளியும், ராஜபாண்டியின் மகன் தொப்பிலி முனியசாமியும் கொலை செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக, 2016ல் வெள்ளைக்காளி தரப்பினர், கமுதி அருகே குருசாமியின் மகள் விஜயலட்சுமி கணவர் எம்.எஸ்.பாண்டியின் தம்பி காட்டுராஜாவை கொலை செய்தனர். இதனால் கொதிப்படைந்த வி.கே.ஜி.மணி, 2017ல் தொப்பிலி முனுசாமியை கமுதிக்கு கடத்தி சென்று, கொன்று சாம்பலாக்கினார்.
பதிலுக்கு, 2017ல் வெள்ளைக்காளி தரப்பை சேர்ந்த சகுனி கார்த்திக், முத்து இருளாண்டி ஆகியோர், குருசாமி ஆதரவாளர் சடையாண்டியை வெட்டி கொலை செய்துவிட்டு , 'குருசாமியையும், மணியையும் கொல்லாமல் விடமாட்டோம்' என, ஆடியோ மூலம் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தனர்.
2 என்கவுன்டர்கள்
மதுரை, சிக்கந்தர் சாவடியில் நண்பர் வீட்டில் சகுனி கார்த்திக், முத்து இருளாண்டி பதுங்கியிருந்த போது, போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 'இதற்கு குருசாமி தான் காரணம்' என, வெள்ளைக்காளி தரப்பினர் நம்பினர். பகை இன்னும் அதிகரித்தது.
இதற்கு பழிக்குப்பழியாக, கீழ்மதுரை ரேஷன் கடையில் வைத்து, 2018ல் குருசாமியின் மருமகன் எம்.எஸ்.பாண்டி என நினைத்து, அவரது உறவினரான முனியசாமியை கொலை செய்தனர். 'இந்த முறை குறி தப்பாது' என, 2019ல் லோக்சபா தேர்தல் பிரசார பணியில் ஈடுபட்டிருந்த எம்.எஸ்.பாண்டியையும் கொலை செய்தனர்.
பதிலுக்கு, வெள்ளைக்காளி தரப்பான குல்லா என்ற முத்துப்பாண்டியை, 2020 ஜூலையில் குருசாமி தரப்பினர் கொலை செய்தனர். எம்.எஸ்.பாண்டி கொலையில் தொடர்புடைய சடையாண்டி மகன் முனியசாமியை மிரட்டிய குருசாமி தரப்பை சேர்ந்த 'வகுத்தாலை' மணியின் நண்பரான முருகானந்தத்தை, தலையை துண்டித்து வெள்ளைக்காளி தரப்பினர் கொலை செய்தனர்.
இதற்கிடையே, குருசாமி மகன் 2019 முதல் தேடப்படும் குற்றவாளியாக இருக்கிறார். 24 வழக்குகள் நிலுவையில் உள்ள குருசாமி, பெங்களூருவில் உள்ள மகள் வீட்டில் தங்கினார். 2023ல் அங்குள்ள ஒரு கடையில் வெள்ளைக்காளி கும்பலால் கொடூரமாக வெட்டப்பட்டு, உயிர் பிழைத்தார்.
குருசாமியையும், அவரது கூட்டாளிகளையும் விடக்கூடாது என்பதில் தீவிரமாக உள்ள வெள்ளைக்காளி தரப்பு, 2024ல் குருசாமியின் சகோதரி மகன் கிளாமர் காளியை கொலை செய்தது. இவ்வழக்கில் தொடர்புடைய சந்தேகப்படும் வெள்ளைக்காளி கூட்டாளி சுபாஷ் சந்திர போஸ், கடந்தாண்டு, மதுரை ரிங் ரோட்டில் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இச்சூழலில் தான், இரு நாட்களுக்கு முன் பெரம்பலுார் பகுதியில் புழல் சிறைக்கு சென்று கொண்டிருந்த வெள்ளைக்காளி மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய குருசாமி மருமகளின் சகோதரர் கொட்டு ராஜா, நேற்று அதிகாலை பெரம்பலுார் அருகே போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
23 ஆண்டுகளாக தொடரும் இந்த தீராத பகைக்கு இதுவரை 21 உயிர்கள் பலியாகி உள்ளன. நான்கு என் கவுன்டர்கள் நடந்துள்ளன.

