/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாணவர்களுக்கு இணைய வழியில் பஸ் பாஸ்
/
மாணவர்களுக்கு இணைய வழியில் பஸ் பாஸ்
ADDED : ஜூன் 12, 2025 02:21 AM
மதுரை: பள்ளி, அரசு கல்லுாரி மாணவர்களுக்கு இந்தாண்டு இணைய வழியில் பஸ் பாஸ் வழங்கப்பட உள்ளது.
அரசு போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்கள் சேர்க்கை ஆக.31 வரை நடைபெறும். அதன்பின்பே எந்த மாணவர்கள், எந்தப் பள்ளியில், எந்த வகுப்பில் படிக்கிறார்கள் என்ற அறிக்கையை பெற முடியும். மதுரை மாவட்டத்தில் 4.65 லட்சம் பள்ளி மாணவர்களும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவர்களும் கட்டணமில்லா சேவையை பெறுகின்றனர். அவர்களின் விவரங்களை கல்வி நிறுவனங்களிடம் பெற்று வருகிறோம்.
அவற்றை முறைப்படுத்தி இணையத்தில் பதிவேற்றம் செய்தபின் மாணவர்களுக்கு தெரியப்படுத்துவோம். மாணவர்களே அதனை பதிவிறக்கம் செய்து பஸ் பாஸாக பயன்படுத்தலாம். அதுவரை மாணவர்களின் கடந்தாண்டு பஸ் பாஸ், சீருடை மற்றும் பள்ளி அடையாள அட்டையை காண்பித்து பயணிக்கலாம்.
பள்ளி துவங்கும், முடியும் நேரத்தில் பஸ்கள் சரியாக இயங்குவதை கண்காணிக்க அலுவலர் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. உரிய நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்தி, மாணவர்களை பாதுகாப்பாக ஏற்றி, இறக்கிச் செல்ல ஓட்டுனர், நடத்துனர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.