கூடினால் 'கோடி' நன்மை :மதுரையுடன் தேனி, விருதுநகர் ஆவின் இணைக்கப்படுமா :பால் கொள்முதலும் பெருகும்; நிர்வாக செலவும் குறையும்
கூடினால் 'கோடி' நன்மை :மதுரையுடன் தேனி, விருதுநகர் ஆவின் இணைக்கப்படுமா :பால் கொள்முதலும் பெருகும்; நிர்வாக செலவும் குறையும்
ADDED : ஜூலை 01, 2026 01:52 AM

மதுரை: 'பால் தேவை அதிகமுள்ள மதுரை ஆவின் ஒன்றியத்துடன், குறைவான கொள்முதல் உள்ள தேனி, விருதுநகர் ஆவின் ஒன்றியங்களை இணைக்க வேண்டும்' என அலுவலர்கள் எதிர்பார்க்கின்றனர். மாநில அளவில் தற்போது 27 ஆவின் ஒன்றியங்கள் செயல்படுகின்றன. இவற்றில் மதுரை, திருச்சி, ஈரோடு என சில ஒன்றியங்களே லாபத்தில் இயங்குகின்றன. அதேநேரம் இங்கு பால் தேவையும் அதிகம் உள்ளது. குறிப்பாக மதுரை ஆவினின் ஒரு நாள் கொள்முதல் தற்போது 1.60 லட்சம் லிட்டர். விற்பனை 2 லட்சம் லிட்டர். இங்கு 40 ஆயிரம் லிட்டர் பால் பற்றாக்குறை உள்ளது.
ஆனால் அ.தி.மு.க., ஆட்சியில் மதுரையில் இருந்து தனியாக பிரிக்கப்பட்ட தேனி ஆவின் நஷ்டத்தில் இயங்குகிறது. இங்கு எதிர்பார்த்த பால் கொள்முதலும் இல்லை. விற்பனையும் குறைந்துவிட்டது.
மதுரை அருகே உள்ள விருதுநகர் ஆவினிலும் நாள் ஒன்றுக்கு 16 ஆயிரத்து 800 லிட்டர் என்ற அளவில்தான் கொள்முதல் உள்ளது.
தேனி, விருதுநகர் ஒன்றியங்களில் அலுவலர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளதால் நிர்வாகச் செலவும் அதிகரித்து வருகிறது. லாபத்தில் இயங்கும் மதுரை ஆவினிலோ அலுவலர்கள் பற்றாக்குறை பெரும் சவாலாக உள்ளது. இதனால் லாபத்தில் இயங்கும் மதுரையுடன் தேனி, விருதுநகர் ஒன்றியங்களை இணைத்தால் நிர்வாக செலவு ரூ.பல லட்சம் குறையும் வாய்ப்புள்ளது.
நிர்வாக இயக்குநர் கவனத்திற்கு இதுகுறித்து ஆவின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: அ.தி.மு.க., தி.மு.க., ஆட்சி காலத்தில் அரசியல் நோக்கத்திற்காக தமிழகம் முழுவதும் 17 ஆக இருந்த ஆவின் ஒன்றியங்களை பிரித்து 27 ஆக அதிகரித்தனர்.
'தாய்' ஒன்றியத்தில் இருந்து பிரித்த அனைத்து புதிய ஒன்றியங்களும் நஷ்டத்தில் இயங்குகின்றன.
மதுரையுடன் தேனி இணைந்திருந்தபோது ஒரு நாள் பால் கொள்முதல் அதிகபட்சம் 3.50 லட்சம் லிட்டராக இருந்தது. பிரித்த பின் இரண்டிலும் குறைந்து விட்டது. நஷ்டம் காரணமாக தேனி பால் உற்பத்தியாளர்கள் தனியாருக்கும், கேரளாவுக்கும் பாலை விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தேனி, விருதுநகர் ஒன்றியங்களில் தலா 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர். இவற்றின் நிர்வாக செலவு அதிகரித்துள்ளது.
அதேநேரம் மதுரையில் போதிய உதவிப் பொது மேலாளர், மேலாளர், எஸ்.எப்.ஏ., (மஸ்துார்) இன்றி ஊழியர் பற்றாக்குறை உள்ளது.
தேனி, விருதுநகரை மதுரையுடன் இணைத்தால் அதிக லாபத்தில் இயங்கும் சூழல் ஏற்படும். ஆவின் நிர்வாக இயக்குநர் அஜய் யாதவ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
