ADDED : நவ 07, 2024 02:24 AM
தலைவாசல்: சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே நாவலுாரை சேர்ந்தவர் அர்ஜூனன், 75; இவரது மனைவி காந்தியம்மாள், 67. இவர் நேற்று காலை, 8:00 மணிக்கு, மாத்திரை வாங்குவதற்கு வீரகனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றார். அர்ஜூனன், வீட்டின் வெளியே கட்டிலில் படுத்திருந்தார். காலை, 8:30 மணிக்கு கூரை வீட்டில் தீப்பற்றியது. அப்பகுதியினர், தண்ணீர் ஊற்றி அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளிகளான சிரஞ்சீவி, 50, சக்திவேல், 41, தமிழ்செல்வன், 35, ஆகியோர், தீயை அணைப்பதற்கு வீடு அருகே சென்றபோது, உள்ளே இருந்த, இரு 'காஸ்' சிலிண்டர்கள் வெடித்தன. இதில், மூவரும் படுகாயம் அடைய, ஆம்புலன்ஸ் மூலம் ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
கெங்கவல்லி தீயணைப்பு வீரர்கள், மேலும் தீ பரவாமல் அணைத்தனர். இருப்பினும், அதன் அருகே உள்ள அர்ஜூனனின் பேரன் வசிக்கும் மற்றொரு கூரை வீடும் தீப்பற்றி எரிந்து நாசமாகின. இரு வீடுகளிலும் அரிசி, துணிகள் உள்ளிட்டவை எரிந்தன. மேலும், படுகாயம் அடைந்த மூவரும் மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வீரகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.