ADDED : ஏப் 05, 2025 04:59 AM
திருமங்கலம்: திருமங்கலம் - விருதுநகர் ரோட்டில் தெற்குதெரு பஸ் ஸ்டாப் அருகில் பாண்டியன் நகர் ரயில்வே கேட் செல்லும் ரோட்டில் சில நாட்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. தோண்டிய பள்ளத்தை முறையாக மூடாமல் மீண்டும் தார் ரோடு அமைக்கவில்லை.
நேற்று முன்தினம் மதியம் முதல் பெய்த கனமழையால் அரைகுறையாக மூடிய பள்ளத்தில் அரிப்பு ஏற்பட்டு மீண்டும் பள்ளமாக மாறியது.
அந்த வழியாக சென்ற வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் ரோட்டோர தடுப்புகளால், பள்ளம் அருகே வாகனங்கள் செல்ல முடியாதபடி தடுத்தனர்.
இந்தப் பள்ளம் காரணமாக திருமங்கலம் - விருதுநகர் ரோட்டில் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கின. அருகிலேயே பஸ் ஸ்டாப் இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
மேலும் பாண்டியன் நகரில் பெரிய வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
நெடுஞ்சாலை அதிகாரிகள் உடனே பள்ளத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.