/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பெண் கொலை வழக்கில் விதிக்கப்பட்ட துாக்கு தண்டனை 'சாகும் வரை சிறை' என குறைப்பு
/
பெண் கொலை வழக்கில் விதிக்கப்பட்ட துாக்கு தண்டனை 'சாகும் வரை சிறை' என குறைப்பு
பெண் கொலை வழக்கில் விதிக்கப்பட்ட துாக்கு தண்டனை 'சாகும் வரை சிறை' என குறைப்பு
பெண் கொலை வழக்கில் விதிக்கப்பட்ட துாக்கு தண்டனை 'சாகும் வரை சிறை' என குறைப்பு
ADDED : அக் 12, 2025 03:23 AM
மதுரை: பெண்ணை கொன்று, தங்க சங்கிலியை பறித்து சென்ற நபருக்கு, கீழமை நீதிமன்றம் விதித்த துாக்கு தண்டனையை, இயற்கை மரணம் அடையும் வரை ஆயுட்கால சிறை தண்டனையாக உயர் நீதிமன்ற மதுரை கிளை மாற்றியது.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னகரை சேர்ந்தவர் சிவகாமி; மின்வாரிய ஊழியர். இவரது மகள் லோகப்பிரியா, 20. இவர்களது உறவினர் திருமயம் அருகே பெருந்துறையை சேர்ந்த லட்சுமணன், 32. இவர், அடிக்கடி சிவகாமியிடம் பணம் கேட்டார். சிவகாமி தர மறுத்தார்.
இந்நிலையில், 2021 ஏப்., 27ல் காலையில், லோகப் பிரியாவை கொலை செய்து, தங்க சங்கிலி, மொபைல் போனை பறித்து, டூ - வீலரை லட்சுமணன் திருடி சென்றார். கணேஷ்நகர் போலீசார் கொலை வழக்கு பதிந்தனர்.
அவருக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், ஏப்., 12ல் துாக்கு தண்டனை விதித்தது. தண்டனையை ரத்து செய்ய கோரி லட்சு மணன் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஆர்.பூர்ணிமா அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் பாலசுந்தரம், 'சந்தேகத்திற்கு இடமின்றி வழக்கை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது. இது சூழ்நிலை ஆதாரங்களை அடிப்படையாக கொண்டது' என, வாதாடினார்.
அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் திருவடிக்குமார், 'சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
'இவ்வழக்கு மரண தண்டனைக்கு உத்தரவாதம் அளிக்கும் அரிதிலும் அரிதான வழக்கு வகையின் கீழ் வரவில்லை. மரண தண்டனையை, இயற்கை மரணம் வரை ஆயுள் தண்டனையாக மாற்றலாம்' என, வாதிட்டனர்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள கொள்கை அடிப்படையில், இவ்வழக்கு, அரிதிலும் அரிதான வழக்குகளின் வரம்பை தாண்டவில்லை. இவ்வழக்கு மரண தண்டனை விதிப்பதற்கான அளவுகோல்களை பூர்த்தி செய்யவில்லை.
சாட்சியங்களின் தன்மை மற்றும் சம்பவம் நடந்த பிறகு மனுதாரரின் நடத்தை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இது மரண தண்டனை விதிக்கப்பட வேண்டிய, அரிதிலும் அரிதான வகையின் கீழ் வரும் வழக்கு அல்ல.
மனுதாரரின் இயல்பான வாழ்க்கையின் எஞ்சிய காலம் வரை மரண தண்டனைக்கு பதிலாக, ஆயுள் தண்டனையாக மாற்றுவதன் மூலம் நீதியின் நோக்கம் நிறைவேறும்.
மரண தண்டனையை இயற்கை மரணம் அடையும் வரை ஆயுட்கால சிறை தண்டனையாக மாற்றியமைக்கிறோம்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.