/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போலீசாருக்கு எதிரான புகார்களை விசாரிக்க மாவட்ட, மாநில ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தகவல்
/
போலீசாருக்கு எதிரான புகார்களை விசாரிக்க மாவட்ட, மாநில ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தகவல்
போலீசாருக்கு எதிரான புகார்களை விசாரிக்க மாவட்ட, மாநில ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தகவல்
போலீசாருக்கு எதிரான புகார்களை விசாரிக்க மாவட்ட, மாநில ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தகவல்
ADDED : செப் 24, 2025 08:34 AM
மதுரை: தமிழகத்தில் போலீசாருக்கு எதிரான புகார்களை விசாரிக்க மாவட்ட, மாநில அளவில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தாக்கல் செய்த பொதுநல மனு:
உச்சநீதிமன்றம்,' அனைத்து மாநிலங்களிலும் போலீசாருக்கு எதிரான புகார்களை விசாரிக்க ஆணையம் அமைக்க வேண்டும்,' என 2006 ல் உத்தரவிட்டது. அதன்டி டி.எஸ்.பி.,பதவி வரையிலான போலீஸ் அதிகாரிகள் மீதான புகார்களை விசாரிக்க மாவட்ட அளவில் ஆணையம் அமைக்க வேண்டும். எஸ்.பி.,மற்றும் அதற்கு மேல் பதவிகளில் உள்ள போலீஸ் அதிகாரிகள் மீதான புகார்களை விசாரிக்க மாநில அளவில் ஆணையம் இருக்க வேண்டும்.
போலீஸ் காவலில் மரணம், காயம், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பான புகார்களை மாநில ஆணையம் விசாரிக்கும். நிலம், வீடு அபகரிப்பு அல்லது அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான புகார்களை மாவட்ட ஆணையம் விசாரிக்கும். சம்பந்தப்பட்ட போலீசாருக்கு எதிராக துறை ரீதியான அல்லது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரைக்கப்படும். உச்சநீதிமன்ற உத்தரவை தமிழகத்தில் நிறைவேற்றவில்லை.
போலீஸ் காவலில் மரணங்கள் தொடர்கின்றன. திருப்புவனம் போலீசார் தாக்கியதில் கோயில் காவலாளி அஜித்குமார் இறந்தார். ஆணையம் அமைத்திருந்தால் இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க முடியும். போலீசாருக்கு எதிரான புகார்களை விசாரிக்க மாநில, மாவட்ட அளவில் ஆணையம் அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது.
அரசு பிளீடர் திலக்குமார்: உள்துறை செயலர் தலைமையில் டி.ஜி.பி.,-ஏ.டி.ஜி.பி.,(சட்டம்-ஒழுங்கு) உறுப்பினர்களாக கொண்ட மாநில ஆணையம், மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையில் எஸ்.பி., மூத்த கூடுதல் எஸ்.பி.,யை உறுப்பினர்களாக கொண்ட ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு 2019 ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது எனக்கூறி ஆவணம் தாக்கல் செய்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.