ADDED : ஆக 19, 2026 04:42 AM
மதுரை:நிதிநிலை அறிக்கையில் கடந்தாண்டை விட சுகாதாரத்துறைக்கு ரூ.1451 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டது. 'நலம்' செயலி அறிமுகப்படுத்தப்பட்டதற்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
மதுரையில் சங்க மாநில தலைவர் டாக்டர் சீனிவாசன் கூறியதாவது:
சுகாதாரத்துறையை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கத்துடனும் கிராம மக்களும் அரசு மருத்துவமனைகளை எளிதில் அணுகும் வகையில் அமைக்கப்பட்ட 'நலம்' செயலியை வரவேற்கிறோம். சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப்பணியிடங்களுக்கான 284 இடங்கள் உருவாக்கப்பட்டது நீண்டநாள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாக உள்ளது. தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவக்கல்லுாரிகளில் பயிலும் முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான தங்கும் விடுதி உருவாக்கப்பட உள்ளதற்கும் நன்றி.
காலமுறை ஊதியத்தில் 2500 நர்ஸ் பணியிடங்கள், 1695 தொகுப்பூதிய நர்ஸ் பணியிடம், 2443 இடைநிலை சுகாதாரப்பணியாளர் பணியிட நியமனம், கிராம சுகாதார நர்ஸ்கள், மருந்தாளுனர்கள், நர்சிங் உதவியாளர்கள் உள்ளிட்ட 3594 பணியிட நியமனத்தையும் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் வரவேற்கிறது என்றார்.
