/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உத்தப்புரம் கோயிலில் காலையில் திருவிழா; மாலையில் பூட்டு பதட்டத்தால் போலீஸ் குவிப்பு
/
உத்தப்புரம் கோயிலில் காலையில் திருவிழா; மாலையில் பூட்டு பதட்டத்தால் போலீஸ் குவிப்பு
உத்தப்புரம் கோயிலில் காலையில் திருவிழா; மாலையில் பூட்டு பதட்டத்தால் போலீஸ் குவிப்பு
உத்தப்புரம் கோயிலில் காலையில் திருவிழா; மாலையில் பூட்டு பதட்டத்தால் போலீஸ் குவிப்பு
ADDED : ஏப் 24, 2025 01:47 AM

எழுமலை : மதுரை மாவட்டம் எழுமலை அருகே உத்தப்புரம் முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் பொங்கல் வைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் கோயிலுக்கு பூட்டு போடப்பட்டது.
இக்கோயில் வழிபாடு நடத்துவதில் உத்தப்புரத்தில் உள்ள இரு சமூகத்தினர் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இந்த ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழாவில் இன்னொரு சமூக மக்கள் வழிபட அனுமதிக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. சர்ச்சைக்குரிய அரசமரத்தைச் சுற்றி தடுப்புகள் அமைத்து போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் இரவு கரகம், முத்தாலம்மன் சிலை, முளைப்பாரி எடுத்து வழிபாடு துவங்கியது.
நேற்று காலை ஒரு சமூகத்தினர், சக்தி கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபட்டனர். இன்னொரு சமூகத்தினரும் கிடா வெட்டி, பொங்கல் வைக்க போவதாக அறிவிக்க பதட்டமான சூழல் ஏற்பட்டது. மாலை 4:00 மணிக்கு மேல் எடுக்க வேண்டிய கரகம், முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சி முன்னதாக நடத்தப்பட்டது. கோயில் வளாகத்தில் இருந்து கரகம், முளைப்பாரி, முத்தாலம்மன் சிலைகள் எடுத்து வெளியேறியதைத் தொடர்ந்து அதிகாரிகள் கோயிலை பூட்டினர். இன்னொரு சமூகத்தினர் பொங்கல் வைக்க ஊர்வலமாக வந்தனர். போலீசார் தடுக்க வாக்குவாதம் ஏற்பட்டது.
பேரையூர் தாசில்தார் செல்லப்பாண்டி பேச்சுவார்த்தை நடத்தினார். 'நீதிமன்ற உத்தரவுப்படி வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. நீங்களும் வழிபாடு செய்தீர்கள். இந்த நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டு கோயில் வளாகத்திற்குள் பொங்கல் வைக்க அனுமதி வழங்க முடியாது. தற்போது வழிபாடு முடிந்து கோயில் பூட்டப்பட்டது. மற்ற உரிமைகள் குறித்து நீதிமன்றம் மூலம் தீர்வு காணுங்கள்' என்றார்.
இதை ஏற்காமல் தர்ணாவில் ஈடுபட்டனர். 'நாங்கள் வந்த போது போலீசார், வருவாய்த்துறையினர் தடுத்தனர் என்பதை பதிவு செய்வதற்காகத்தான் வந்தோம். கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபாடு செய்வதற்கான உரிமைக்கு நீதிமன்றத்திற்கு சென்று தீர்வு காண்போம்' என அறிவித்துச் சென்றனர்.
தென்மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த சின்கா, டி.ஐ.ஜி., அபினவ்குமார், எஸ்.பி., அரவிந்த், உசிலம்பட்டி டி.எஸ்.பி., சந்திரசேகர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆர்.டி.ஓ., சண்முக வடிவேல் தலைமையில் வருவாய்த்துறையினர் முகாமிட்டுள்ளனர்.