/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இந்தியாவில் முதன் முறையாக மதுரையில் நாட்டின நாய்களுக்கான கண்காட்சி போட்டி ராஜபாளையம் ரக நாய்களுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற முயற்சி
/
இந்தியாவில் முதன் முறையாக மதுரையில் நாட்டின நாய்களுக்கான கண்காட்சி போட்டி ராஜபாளையம் ரக நாய்களுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற முயற்சி
இந்தியாவில் முதன் முறையாக மதுரையில் நாட்டின நாய்களுக்கான கண்காட்சி போட்டி ராஜபாளையம் ரக நாய்களுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற முயற்சி
இந்தியாவில் முதன் முறையாக மதுரையில் நாட்டின நாய்களுக்கான கண்காட்சி போட்டி ராஜபாளையம் ரக நாய்களுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற முயற்சி
ADDED : ஜூலை 06, 2025 06:18 AM

மதுரை: நாட்டின நாய்களுக்கான பிரத்யேக சங்க தமிழ்நாடு கிளை, மதுரை கெனைன் கிளப் சார்பில் இந்தியாவில் முதன்முறையாக மதுரையில் 'இந்திய நாட்டின நாய்களுக்கான' பிரத்யேக கண்காட்சி போட்டி நேற்று நடந்தது.
தமிழகத்தின் ராஜபாளையம், சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை இன நாய்கள், ஆந்திராவின் பாஷ்மி, கர்நாடகாவின் முதால் ஹவுண்டு, மகாராஷ்டிராவின் கேரவன் ஹவுண்டு, உத்தரபிரதேசத்தின் ராம்பூர் ஹவுண்டு என இந்தியாவில் உள்ள எட்டு வகையைச் சேர்ந்த 269 நாட்டின நாய்கள் கண்காட்சியில் இடம் பெற்றன. பப்பி, ஜூனியர், அடல்ட் வகையின் கீழ் மூன்று நிலைகளில் நாய்களின் இனத்திற்கேற்ற உடல், பற்கள் அமைப்பு, கால் பாதம், நடை, வால் ஆகியவற்றை வைத்து சிறந்த நாய்களை சர்வதேச நடுவர் சுதர்சன் தேர்வு செய்தார்.
70 நாய்களின் டி.என்.ஏ.,
கண்காட்சியின் நோக்கம் குறித்து தமிழ்நாடு கிளைச் செயலாளர் பிரவீன், துணைத்தலைவர் பாலமுருகன் கூறியதாவது:
தமிழக, இந்திய நாட்டின நாய்களை சர்வதேச அங்கீகாரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக இந்த 'ஷோ' நடத்துகிறோம். சர்வதேச அளவில் டாபர்மேன், ராட்வீலர், லேப்ரடார் போன்ற சர்வதேச நாய்களை இந்தியாவில் அங்கீகரிக்கிறோம். நமது நாட்டின நாய்களுக்கு சர்வதேச அளவில் இதுவரை அங்கீகாரம் கிடைக்கவில்லை.
முதல்கட்டமாக ராஜபாளையம் ரகத்தைச் சேர்ந்த 70 நாய்களை தேர்வு செய்து அவற்றின் டி.என்.ஏ., மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். இதன் மூலம் அவற்றின் சிறப்புகளை எடுத்துரைத்து சர்வதேச அளவில் அங்கீகாரம் பெறச் செய்வதே நோக்கம். இந்தியாவிலும் சிறப்பு வாய்ந்த நாய்கள் உள்ளதென வெளிநாட்டவரும் தெரிந்து அவற்றை அங்கீகரிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
கண்காட்சி நடத்துவதற்கு ஒருமாதம் முன்பாக ராஜபாளையத்தில் நாட்டின நாய்களை வளர்ப்போரை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். இதற்காக ராஜபாளையம், சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை இனத்தைச் சேர்ந்த 115 நாய்களை அடையாளப்படுத்தி நாயின் உரிமையாளர் பெயர், நாயின் ரகம், தன்மை, வயது உள்ளிட்ட விவரங்களை சேகரித்து ஒவ்வொரு நாய்க்கும் ரூ.1500 செலவு செய்து அவற்றுக்கு 'மைக்ரோ சிப்' பொருத்தியுள்ளோம்.
கண்காட்சிக்கு வந்துள்ள மற்ற நாய்களுக்கு ஏற்கனவே சான்றிதழ் பெற்றுள்ளனர். இங்கு110 ராஜபாளையம், 59 கோம்பை, 36 கன்னி, 33 சிப்பிப்பாறைகள், பிற மாநிலங்களைச் சேர்ந்த நாய்கள் என 269 நாய்கள் ஒரே நாட்டினத்தில் இடம்பெற்றது இதுவே முதன்முறை என்றனர்.
மதுரை கெனைன் கிளப் சார்பில் அனைத்து நாய்களுக்கான 39, 40 வது நாய் கண்காட்சி இன்று (ஜூலை 6) தமுக்கம் மைதானத்தில் காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை நடக்கிறது. அனுமதி இலவசம்.
- மகேஸ்வரன், மதுரை
- அய்யனார், ராஜபாளையம்
- கலைவாணி, சென்னை