/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சிகிச்சையில் கவனக்குறைவா, பிறவிக்குறைபாடா குழந்தைக்கு இழப்பீடு கோரிய வழக்கு தள்ளுபடி உயர்நீதிமன்றம் உத்தரவு
/
சிகிச்சையில் கவனக்குறைவா, பிறவிக்குறைபாடா குழந்தைக்கு இழப்பீடு கோரிய வழக்கு தள்ளுபடி உயர்நீதிமன்றம் உத்தரவு
சிகிச்சையில் கவனக்குறைவா, பிறவிக்குறைபாடா குழந்தைக்கு இழப்பீடு கோரிய வழக்கு தள்ளுபடி உயர்நீதிமன்றம் உத்தரவு
சிகிச்சையில் கவனக்குறைவா, பிறவிக்குறைபாடா குழந்தைக்கு இழப்பீடு கோரிய வழக்கு தள்ளுபடி உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஏப் 15, 2025 07:33 AM

மதுரை : திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு மருத்துவமனையில் கவனக்குறைவாக சிகிச்சை அளித்ததால் பிறந்த குழந்தைக்கு காயம் உண்டாகி தலையின் தோல் பகுதியில் அரிப்பு ஏற்பட்டதாகவும், இழப்பீடு கோரியும் தாக்கலான வழக்கில் 'டாக்டர்களின் கவனக்குறைவு அல்லது பிறவி குறைபாட்டின் விளைவாக ஏற்பட்டதா என்பதை தீர்மானிக்க ஆதாரங்கள் தேவை' எனக்கூறி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த மனு: எனது மனைவிக்கு மணப்பாறை அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. டாக்டர்கள் கவனக்குறைவாக சிகிச்சை அளித்ததால் குழந்தைக்கு காயம் உண்டாகி தலையின் தோல் பகுதியில் அரிப்பு ஏற்பட்டது. எந்தவொரு குழந்தை பிறப்பின்போதும் இதுபோன்ற காயங்கள் ஏற்படுவது பொதுவானவை என அதே டாக்டர்கள் தெரிவித்தனர். ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிரசவத்தின்போது ஏற்பட்ட காயம் காரணமாக, தலை தோல் பகுதியில் தொடர் பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.
மணப்பாறை அரசு மருத்துவமனையில் கவனக்குறைவாக குழந்தைக்கு காயம் ஏற்படுத்தியதற்காக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்தி தமிழக சுகாதாரத்துறை செயலர், திருச்சி கலெக்டர், மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு மனு அனுப்பினேன். இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி வி.லட்சுமிநாராயணன் விசாரித்தார்.
அரசு தரப்பு: டாக்டர்களின் கவனக்குறைவு காரணமல்ல. குழந்தை 'அப்ளாசியா குடீஸ் கான்ஜென்டியா' எனப்படும் அரியவகை பிறவி குறைபாட்டுடன் பிறந்தது என மருத்துவமனை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். சுகாதார பணிகள் இணை இயக்குனர் விசாரித்தார். அவர் 'குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் அது அனுபவித்த பிரச்னைக்கு காரணம் பிறவி குறைபாடு' என முடிவுக்கு வந்தார். திருச்சி அரசு மருத்துவமனையின் ஒரு டாக்டர் (நியோனாட்டாலஜிஸ்ட்) மற்றொரு விசாரணை நடத்தினார்.
அவர்,'குழந்தையின் தலையிலுள்ள திட்டுகள் பிறப்பு குறைபாட்டின் காரணமாக ஏற்பட்டது' என உறுதிப்படுத்தினார். நிலைமையை தெளிவுபடுத்தியபின்தான் தாயும், குழந்தையும் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதி: இழப்பீடு கோரி திருச்சி நுகர்வோர் நீதிமன்றத்தில் மனுதாரர் மனு செய்தார். அதை விசாரிக்க அதிகார வரம்பு இல்லை எனக்கூறி அந்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இழப்பீடு வழங்க உத்தரவிடுவதற்கு முன் டாக்டர்களின் கவனக்குறைவு இருந்தது என்பதை முடிவு செய்ய மறுக்க முடியாத ஆதாரங்கள் நீதிமன்றத்திற்கு தேவை. கவனக்குறைவு அல்ல. மாறாக பிறவி குறைபாடு என்பது அரசின் நிலைப்பாடு. ஒரு முறை அல்ல; இருமுறை விசாரணை நடத்தியதாக அரசு தரப்பு கூறுகிறது.
குழந்தைக்கு பாதிப்பு டாக்டர்களின் கவனக்குறைவு அல்லது பிறவி குறைபாட்டின் விளைவாக ஏற்பட்டதா என்பதை இந்த ரிட் மனு மூலம் தீர்மானிக்க முடியாது. இதற்கு இரு தரப்பிலும் கூடுதல் ஆதாரங்கள் மற்றும் நிபுணர்களின் சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இது பிரமாணப் பத்திரங்கள் மூலம் முடிவுக்கு வரக்கூடிய விஷயம் அல்ல. சிவில் வழக்கு தாக்கல் செய்து நிவாரணம் தேடலாம். இம்மனு ஏற்புடையதல்ல. தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு உத்தரவிட்டார்.