/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பழங்குடியினருக்கு நிலம் ஒதுக்கீடு செய்ய வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
/
பழங்குடியினருக்கு நிலம் ஒதுக்கீடு செய்ய வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
பழங்குடியினருக்கு நிலம் ஒதுக்கீடு செய்ய வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
பழங்குடியினருக்கு நிலம் ஒதுக்கீடு செய்ய வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
ADDED : அக் 19, 2025 03:24 AM
மதுரை: மதுரை மாவட்டம் பேரையூர், உசிலம்பட்டி பகுதியில் வசிக்கும் பழங்குடியினருக்கு வன உரிமைச் சட்டப்படி தலா 2 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனுார் தெய்வேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனு:
நாங்கள் மலைவாழ் பளியர் இனத்தை சேர்ந்தவர்கள். சதுரகிரி மலை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையில் வசித்த பழங்குடிகள். சதுரகிரி மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை சாம்பல் நிற அணில்கள் சரணாலயமாக அரசு அறிவித்தது. இதனால் இடம்பெயர்ந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரம், குறிஞ்சி நகர், பேரையூர் தாலுகா மொக்கத்தான்பாறை, அய்யனார்கோவில் பகுதியில் குடியேறினோம். அரசு சிலருக்கு வீடுகளை வழங்கியது.
வன உரிமைச் சட்டப்படி மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வனத்துறை அலுவலர்களின் தலையீடு இன்றி சிறு வனப் பொருட்கள் மற்றும் மூலிகைகளை சேகரிக்க எங்களை அனுமதிக்க வேண்டும். குறிஞ்சி நகர் அரசு நிலத்தில் கால்நடைகளுக்கு தீவனம் பயிரிட, மூலிகைப் பண்ணை அமைக்க, வாழ்வாதாரத்திற்காக பாரம்பரிய பயிர்களை பயிரிட அனுமதிக்க வேண்டும்.
குறிஞ்சி நகரில் பழுதடைந்துள்ள வீடுகளை சீரமைக்க வேண்டும். குறிஞ்சிநகர், அய்யனார்கோவில், அழகம்மாள்புரம், மொக்கத்தான்பாறையில் வசிக்கும் பழங்குடியினர் குடும்பத்தினருக்கு தலா 2 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர், வனத்துறை செயலர்களுக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சண்முகராஜா சேதுபதி ஆஜரானார். நீதிபதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வனத்துறை, வருவாய்த்துறை செயலர்கள், மதுரை கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு நவ.17க்கு ஒத்திவைத்தனர்.