/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தாமிரபரணி குறுக்கே அணை கட்ட வழக்கு; பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
/
தாமிரபரணி குறுக்கே அணை கட்ட வழக்கு; பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
தாமிரபரணி குறுக்கே அணை கட்ட வழக்கு; பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
தாமிரபரணி குறுக்கே அணை கட்ட வழக்கு; பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜூலை 31, 2025 06:15 AM
மதுரை : நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கும் வகையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட தாக்கலான வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசீலித்து 5 மாதங்களில் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருச்செந்துார் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனு:
பொதிகை மலையில் உருவாகி திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்ட தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து, புன்னக்காயல் அருகே கடலில் கலக்கும் வற்றாத நதியாக தாமிரபரணி உள்ளது. இதில் பாசனத்திற்காக 8 அணைகள், 11 கால்வாய்கள், 186 நீர்நிலைகள் உள்ளன.
அவற்றின் மூலம் திருநெல்வேலியில் 40 ஆயிரம் ஏக்கர், துாத்துக்குடியில் 46 ஆயிரத்து 107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இது தவிர்த்து திருநெல்வேலி, துாத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களின் குடிநீர் திட்டத்திற்காகவும் தாமிரபரணி தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து ஏராளமான நீர், தொழிற்சாலை பயன்பாட்டிற்காக தினமும் எடுக்கப்படுகிறது. அதன் காரணமாக துாத்துக்குடி மாவட்டத்தின் பெரும்பாலான தாலுகாக்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இதனால் துாத்துக்குடி மாவட்டம் வறட்சியான மாவட்டமாக மாறும் நிலை ஏற்படும்.
அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் ஆண்டு தோறும் 250 சதவீத தாமிரபரணி நீர் வீணாக கடலில் கலக்கிறது.
இதனை துாத்துக்குடி மாவட்டத்திற்கு பயன்படும் வகையில் ஸ்ரீவைகுண்டம் அணைக்கும், கடலில் கலக்கும் இடத்திற்கும் இடையே புதிய அணை கட்ட வேண்டும் என அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது. மனுதாரர் தனது கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புதிதாக மனு அளிக்க வேண்டும். அதனை அதிகாரிகள் பரிசீலித்து 5 மாதங்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு பைசல் செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.