/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போலீஸ் காவலில் அஜித்குமார் மரணம் 6 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் உயர்நீதிமன்றம் உத்தரவு
/
போலீஸ் காவலில் அஜித்குமார் மரணம் 6 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் உயர்நீதிமன்றம் உத்தரவு
போலீஸ் காவலில் அஜித்குமார் மரணம் 6 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் உயர்நீதிமன்றம் உத்தரவு
போலீஸ் காவலில் அஜித்குமார் மரணம் 6 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : செப் 25, 2025 03:24 AM
மதுரை : சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் மரணம் மற்றும் நிகிதா காரில் நகை திருடுபோன வழக்குகளில் சி.பி.ஐ.,விசாரணையை முடித்து 6 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலுக்கு பேராசிரியை நிகிதா காரில் வந்தார். காரிலிருந்த நகை திருடுபோனது. அவர் திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். கோயில் காவலாளியாக இருந்த அஜித்குமாரை ஜூன் 27ல் போலீசார் விசாரித்தனர். போலீசார் தாக்கியதில் அவர் இறந்தார்.
போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் கைது செய்யப்பட்டனர். சி.பி.ஐ.,விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிவாரணங்கள் கோரி வழக்கறிஞர் மாரீஸ்குமார் மற்றும் சிலர் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனர்.
ஜூலை 8ல் இரு நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், 'வழக்கு விசாரணை சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டுள்ளது,' என தெரிவித்தது. அப்போது நீதிபதிகள், 'நகை திருட்டு தொடர்பாக நிகிதா அளித்த புகாரையும் சேர்த்து சி.பி.ஐ.,விசாரிக்க வேண்டும். சி.பி.ஐ., ஆக.20 க்குள் சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,' என உத்தரவிட்டனர்.
அஜித்குமார் மரணமடைந்த வழக்கில் சி.பி.ஐ.,விசாரித்து மதுரை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் (சி.ஜெ.எம்.,) நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலம் முதற்கட்ட இறுதி அறிக்கையை ஆக.20 ல் தாக்கல் செய்தது.
நேற்று உயர்நீதிமன்றக் கிளையில் நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. சி.பி.ஐ.,விசாரணையின் தற்போதைய நிலை குறித்த ரகசிய அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் வைத்து அதன் தரப்பு வழக்கறிஞர் முகைதீன் பாஷா தாக்கல் செய்தார்.
அவர் வாதிட்டதாவது:
அஜித்குமார் மரணம் மற்றும் நகை திருட்டு தொடர்பாக 2 தனித்தனி வழக்குகளை சி.பி.ஐ., பதிந்துள்ளது. அஜித்குமார் மரண வழக்கில் முதற்கட்ட இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தடயவியல்துறையின் ஆய்வறிக்கை இன்னும் வரவில்லை. இரு வழக்குகளிலும் விசாரணையை முடித்து முழுமையான இறுதி அறிக்கை தாக்கல் செய்ய 3 மாதங்கள் அவகாசம் தேவை.
நீதிபதிகள்: அவகாசம் கோருவது ஏற்புடையதல்ல. விரைவில் தாக்கல் செய்ய வேண்டும்.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்: எப்.ஐ.ஆர்., இறுதி அறிக்கை, தடயவியல் அறிக்கையின் நகல்கள் வழங்க உத்தரவிடக்கோரி மதுரை கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதை வழங்கினால்தான் வழக்கில் யார், யார் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது, தொடர்புடைய நபர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளதா என்பதை சரிபார்க்க முடியும். அடுத்தகட்ட விசாரணை கோர முடியும்.
சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டது. இங்கு வழக்கு விசாரணைக்கு வருவதற்கு ஒரு நாள் முன்பு சாட்சிகளின் வீடுகளில் கண்காணிப்பு கேமரா, எச்சரிக்கை அலாரம், கம்பி வேலியை அரசு தரப்பில் அமைத்துள்ளனர். தடயவியல்துறை அறிக்கை வந்தால்தான் வழக்கில் போலீஸ் உயரதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என்பது தெரியவரும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இரு வழக்குகளிலும் 6 வாரங்களில் சி.பி.ஐ.,விசாரணையை முடித்து இறுதி அறிக்கையை கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு ஆவணங்களை கீழமை நீதிமன்றத்தில் கோருவது தொடர்பாக மனுதாரர்கள் சட்டப்படி நிவாரணம் தேடலாம். விசாரணை நவ.6 க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனர்.