/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பூஜை போட்டாச்சு... பாலம் என்னாச்சு...
/
பூஜை போட்டாச்சு... பாலம் என்னாச்சு...
ADDED : ஜூலை 27, 2025 04:18 AM

சோழவந்தான்: சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் நிலையூர் கால்வாயின் குறுக்கே பாலம் அமைக்க பூஜை போடப்பட்டு பணிகள் கிடப்பில் உள்ளன.
இப்பகுதியில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தினமும் நுாற்றுக்கணக்கானோர் நிலையூர் கால்வாயை கடந்து வைகை ஆற்றுப்பகுதிக்கு செல்ல வேண்டியுள்ளது. மேலும் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா, கள்ளழகர் ஆற்றில் இறங்குதல் நிகழ்வின்போது வைகை ஆற்றுக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதற்காக அக்ரஹாரம் படித்துறை அருகே கால்வாய்க்குள் இறங்கி செல்லும் பாதையை பயன் படுத்துகின்றனர். பாசன கால்வாயில் தண்ணீர் செல்லும்போது ஆபத்தான வகையில் கால்வாயை கடந்து செல்கின்றனர். இதுகுறித்து கோரிக்கை விடுக்கப்பட்டு எம்.எல்.ஏ., நிதியின் கீழ் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் பாலம் அமைக்க தீர்மானித்து, சில மாதங்களுக்கு முன்பு பூமி பூஜை போடப்பட்டது. அடித்தளம் மட்டும் அமைக்கப்பட்ட நிலையில் பணிகள் கைவிடப்பட்டு பாலம் கட்டப்படாமல் உள்ளது.
பி.டி.ஓ., கிருஷ்ணவேணி கூறுகையில், ''நீர்வளத்துறையின் அனுமதிக்காக விண்ணப்பித்துள்ளோம். தடையில்லா சான்றிதழ் பெற்றவுடன் பணிகள் விரைந்து முடிக்கப்படும்'' என்றார்.

