/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குலை நோயில் இருந்து நெற்பயிரை காக்க யோசனை
/
குலை நோயில் இருந்து நெற்பயிரை காக்க யோசனை
ADDED : டிச 22, 2025 05:36 AM
திருப்பரங்குன்றம்: 'குலை நோயில் இருந்து நெற்பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து' திருப்பரங்குன்றம் வேளாண் உதவி இயக்குநர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் சம்பா பருவ நெல் நடவு செய்து, பூக்கும் பருவம் வரை பல்வேறு வளர்ச்சி நிலைகளில் உள்ளது. நெற் பயிரை பொறுத்தவரை இரவு நேரங்களில் காற்றில் அதிக ஈரப்பதத்துடன் கூடிய குளிர்ந்த சீதோஷ்ண நிலையால் குலை நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது.
குலை நோய் பாதித்த பயிர்களின் இலைகளின் மேல் சாம்பல் நிற மைய பகுதியுடன், காய்ந்த ஓரங்களுடன் கூடிய கண் வடிவ புள்ளிகள் காணப்படும். பல புள்ளிகள் ஒன்று சேர்ந்து பயிர் முழுவதும் எரிந்தது போன்று தோற்றமளிக்கும். கழுத்துப் பகுதியில் சாம்பல் நிறம் முதல் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றி, கருப்பு நிறமாக மாறி, கதிர் மணிகள் சுருங்கியும், கதிர்கள் உடைந்து தொங்கி கொண்டும் இருக்கும்.
பாதுகாக்க வழிமுறைகள் குலை நோய் தாக்குதலில் இருந்து நெற்பயிரை காக்க அதிக தழைச்சத்து உரம் இடுவதை தவிர்த்து, தழைச்சத்து உரத்தை மூன்று தவணையாக பிரித்து இடவேண்டும். வரப்பில் இருக்கும் களைகளை முழுமையாக அழிக்க வேண்டும். விதைப்பதற்கு முன்பு ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் பொடியுடன் உலர் விதை நேர்த்தி மேற்கொள்ள வேண்டும். அல்லது கேப்டன்/ கார்பன்டசிம்/ திரம்/ டிரைசைக்ளசோல் ஆகியற்றில் ஏதாவது ஒரு மருந்தை ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும்.
சூடோமோனாஸ் புளோரசன்ஸ் கொண்டு நாற்றுகளின் வேர்களை 30 நிமிடங்கள் ஊற வைத்து பின் நடவு செய்ய வேண்டும். நடவு செய்த 45 நாட்களுக்கு பின் 10 நாட்கள் இடைவெளியில் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் பொடியை 0.5 சதவிதம் என்ற அளவில் 3 முறை தெளிக்க வேண்டும். அல்லது எக்டருக்கு 500 மி.லி. எடிபென்பாஸ், அல்லது 500 மி.லி. அசாக்ஸிஸ்ட்ரோபின், அல்லது 500 கிராம் டிரைசைக்ளோசோல் இவற்றில் ஏதாவது ஒன்றை தெளிக்கலாம் என்றார்.

