ADDED : ஜன 19, 2025 05:11 AM
ஜெருசலேம்: மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மோதல் நடந்து வந்த நிலையில், போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது.
ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தம் கடைபிடிக்கப்பட உள்ள நிலையில், இந்த காலத்தில், 33 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்க உள்ளது.
அதற்கு ஈடாக, இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள, 700க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை அந்நாடு விடுதலை செய்ய உள்ளது.
போர் நிறுத்தம் இன்று காலை அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, சமூக வலைதளத்தில் நேற்றிரவு வெளியிட்ட பதிவு:
விடுவிக்கப்படும் பிணைக்கைதிகள் குறித்த பட்டியல் எங்களுக்கு கிடைக்காத வரை, போர் நிறுத்த ஒப்பந்தத்தை செயல்படுத்த மாட்டோம். ஒப்பந்தத்தை மீறுவதை இஸ்ரேல் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. இதற்கு ஹமாஸ் மட்டுமே பொறுப்பு.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.